ஆரணி குப்புசாமி

ஆரணி குப்புசாமி முதலியார் (1866/67-1925) ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் துப்பறியும் புதினங்கள் பலவற்றை எழுதியுள்ளார். ஒன்பது பாகங்களாக வெளியான இரத்தினபுரி இரகசியம் இவரது குறிப்பிடத்தக்க படைப்பு.

இவரது முதல் புதினத்தின் பெயர் லீலா; மொத்தம் 75 புதினங்களை எழுதினார். சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும், சோ. சிவபாதசுந்தரமும் இணைந்து எழுதிய தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும் (1977) எனும் நூலில் 1911 இல் ஒரு இதழில் குப்புசாமி முதலியாரின் புதினமான மதன கண்டி விமர்சனம் செய்யப்பட்டது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இவர் 1911 அல்லது அதற்கு முன்பிருந்தே எழுதத் தொடங்கிவிட்டார் எனத் தெரிகிறது. 1917ம் ஆண்டு வரை 31க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியிருந்தார். ஆனந்த போதினி இதழில் இவரது புதினங்கள் தொடர்களாக வெளியாகின. குப்புசாமி முதலியார் 1920கள் வரை தொடர்ந்து புதினங்கள் எழுதினார். ஷெர்லக் ஹோம்ஸ் கதாப்பாத்திரத்தைத் தழுவி ஆனந்த சிங் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இவரது படைப்புகள் ஆர்தர் கொனன் டொயில், ஜார்ஜ் டபிள்யு. எம். ரேனால்ட்ஸ் போன்ற ஆங்கில குற்றப்புனைவு எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவி அமைந்தன. பூங்கோதை, தினகரசுந்தரி அல்லது ஒரு செல்வச் சீமாட்டியின் அற்புதச் சரித்திரம், அரசூர் இலட்சுமணன் அல்லது அதியற்புதக் கள்ளன், இந்திராபாய் அல்லது இந்திரஜாலக் கள்ளன், ஆனந்த சிங்கின் அற்புதச்செயல்கள், தீன தயாளன் அல்லது துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம், விளையாட்டுச் சாமான் அல்லது விபரீதக்கொலை, மின்சார மாயவன், தபால் கொள்ளைக்காரர்கள், இரத்தினபுரி ரகசியம், மதனகல்யாணி, கடற்கொள்ளைக்காரன், அமராவதி பாலம், ஆயாஷா, இந்திர ஜித்தன் அல்லது கள்ளர் தலைவன், போன்றவை அவற்றுள் சில.

குற்றப்புனைவுப் படைப்புகளைத் தவிர இந்து மத உண்மை, கைவல்ய வசனம் போன்ற சமய நூல்களையும் எழுதியுள்ளார். கொழும்பிலிருந்து வெளியான சஞ்சீவகாரணி என்ற இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். இவர் தொடங்கிய பகவத் கீதையின் உரைநடை மொழிபெயர்ப்பு முழுமை பெறவில்லை.

மேலும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.