ஆம்பல் குழல் (இசைக்கருவி)

ஆம்பல் குழல் என்பது சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஒருவகை காற்றிசைக் கருவியாகும். மூங்கிலையும் ஆம்பல் என்று பண்டைய நூல்கள் குறிக்கின்றன. ஆம்பல் பண்ணை இசைத்த குழலை ஆம்பல் குழல் எனவும் அழைத்திருக்கலாம். எனவே ஆமபல் என்பது ஆம்பலின் தண்டில் செய்த குழல் அல்லது மூங்கிலால் செய்த குழலைக் குறிக்கலாம்.[1]

சிலப்பதிகாரம், நற்றிணை, ஐங்குறுநூறு, குறிஞ்சிப்பாட்டு ஆகிய சங்க இலக்கியங்களில் ஆம்பல் குழல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டு அழகிய ஆம்பல் குழல் தெளிவான இசையை வெளிப்படுத்தும் என்பதை

“ஆம்பல் அம் தீங்குழல் தெள்விளி பயிற்ற” [2] எனக் கூறுகின்றது.

சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில்,

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்

ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பல் அம் தீங்குழல் கேளாமோ தோழீ!" [3]

ஆம்பல் தண்டு நடுவே துளையுடையது. அதனை

"நீர்வளர் ஆம்பல் தூம்பு திரள் கால்"[4]

என நற்றிணை சொல்வதால் அறியலாம்.

ஐங்குறுநூறு ஆம்பல் பண் இனிமையாய் ஒலிப்பதை

“தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்”[5] எனச் சொல்வதால் அறியலாம்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. அரசி (25, மே 2012). "ஆம்பல்". பார்த்த நாள் நவம்பர் 14, 2012.
  2. குறிஞ்சிப்பாட்டு: 222
  3. சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 7: 2
  4. நற்றிணை: 6
  5. ஐங்குறுநூறு: 215: 4
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.