ஆசியத் துடுப்பாட்ட அவை
ஆசியத் துடுப்பாட்ட அவை அல்லது ஏசீசீ (Asian Cricket Council, ACC) ஆசிய நாடுகளில் துடுப்பாட்டத்தை முன்னேற்றுவதற்காக 1983 ஆம் ஆண்டு ஆசியத் துடுப்பாட்ட மாநாடு என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாரியம் பிராந்திய அமைப்பாக இருந்தாலும், பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஓர் உறுப்பு அமைப்பாகும். இம்மாநாடு 1995 முதல் ஆசியத் துடுப்பாட்ட அவை என்ற பெயரில் இயங்குகிறது. இதன் தலைமையகம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளது. 22 ஆசிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
உருவாக்கம் | 1983 |
---|---|
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
உறுப்பினர்கள் | 22 உறுப்பு நாடுகள் |
ஏசிசி தலைவர் | ![]() |
வலைத்தளம் | Asian Cricket Council |
ஏசிசியில் மொத்தம் 4 தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளும், ஏழு அசோசியேட் உறுப்பு நாடுகளும், 11 அஃபிலியேட் உறுப்பு நாடுகளும் உள்ளன. வங்காள தேசம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகியன முழு உரிமை பெற்ற நாடுகளாகும்.
ஹொங்கொங், குவெய்த், மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியன அசோசியேட் உறுப்பு நாடுகளாகும்.
ஆப்கானிஸ்தான், பஹ்ரேய்ன், பூட்டான், புருணை, சீனா, ஈரான், மாலை தீவுகள், மியான்மார், ஓமான், கட்டார், சவுதி அரேபியா ஆகியன அஃபிலியேட் உறுப்பு நாடுகளாகும்.
நான்கு ஆசிய நாடுகளான இந்தோனீசியா, ஜப்பான், பிலிப்பீன்ஸ், தென் கொரியா ஆகியன கிழக்காசிய-பசிபிக் துடுப்பாட்ட அவையில் உறுப்பு நடுகளாக உள்ளன. எனினும் இந்தோனீசிய அணி ஏசிசியில் உறுப்பு நாடாகுவதற்கு விண்ணப்பித்துள்ளது.
ஆசியக் கிண்ணம், ஆசியத் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள், ஏசிசி வெற்றிக் கேடயம், மற்றும் ஆசிய இளையோர் துடுப்பாட்டப் போட்டிகள் ஆகியவற்றை இவ்வாரியம் நடத்துகிறது.