அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம்

அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம் என்பது 1309 முதல் 1378 வரையான காலத்தின் கத்தோலிக்க திருச்சபையின் ஏழு திருத்தந்தையர்கள் உரோமை நகரில் தங்கி ஆட்சிசெய்யும் வழக்கத்திற்கு மாறாக பிரான்சு நாட்டின் அவிஞ்ஞோன் நகரில் தங்கி ஆட்சி செய்த காலத்தைக்குறிக்கும்.[1] இது திருத்தந்தையின் ஆட்சிக்கும் பிரான்சு அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் நிகழ்ந்தது.

பிரான்சு நாட்டின் அவிஞ்ஞோன் நகரில் உள்ள இவ்வரண்மனை இக்காலத்தில் திருத்தந்தையின் இல்லமாக இருந்தது

பிரான்சின் நான்காம் பிலிப்பு மன்னருக்கும் திருத்தந்தை எட்டாம் போனிஃபாஸுக்கும் மோதல் ஏற்பட்டது. எட்டாம் போனிஃபாஸின் மறைவுக்குப்பின்பு திருத்தந்தையான பதினொன்றாம் பெனடிக்ட் 8 மாதம் மட்டுமே ஆட்சி செய்தார். அவருக்குப்பின்பு பிரெஞ்சு நபரான ஐந்தாம் கிளமெண்ட் 1305இல் திருத்தந்தையாக தேர்வானார். இவர் பிரான்சைவிட்டு உரோமைக்கு வர மறுத்து 1309இல் திருத்தந்தையின் அவையினை அவிஞ்ஞோன் நகருக்கு மாற்றினார். அவ்விடமே திருத்தந்தையின் இல்லமாக அடுத்த 67 ஆண்டுகளுக்கு இருந்தது.

இக்காலம் திருத்தந்தையின் பாபிலோனிய அடிமைக்காலம் என சிலரால் அழைக்கப்படுகின்றது.[2][3] ஏழு திருத்தந்தையர்கள் இவ்விடத்திலிருந்து திருச்சபையினை ஆண்டனர். இவர்கள் எழுவரும் பிரெஞ்சு நபர்கள் ஆவர்.[4][5] பிரான்சிலிருந்து ஆண்டதால் இவர்கள் அனைவரும் பிரான்சு அரசின் கட்டுப்பாட்டுக்கு உள்ளானார்கள். இறுதியாக செப்டம்பர் 13, 1376இல் பதினொன்றாம் கிரகோரி அவிஞ்ஞோன் நகரினை விடுத்து ஜனவரி 17, 1377இல் உரோமைக்கு வந்து சேர்ந்தார். இதனால் அவிஞ்ஞோன் திருத்தந்தை ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.

உரோமைக்கு திருபினாலும் கர்தினால்களுக்கும் பதினொன்றாம் கிரகோரிக்குப்பின்பு பதவிவகித்த ஆறாம் அர்பனுக்கும் ஏற்பட்ட மோதலால் மேற்கு சமயப்பிளவு ஏற்பட்டது. இதனால் இரண்டாம் முறையாக அவிஞ்ஞோனிலிருந்து சிலர் ஆட்சிசெய்தாலும் அவர்கள் எதிர்-திருத்தந்தையர்களாக பட்டியலிடப்படுகின்றனர். இப்பிளவு 1417இல் நடந்த காண்ஸ்தான்சு பொதுச்சங்கத்தால் முடிவுக்கு வந்தது.[6]

அவிஞ்ஞோன் திருத்தந்தையர்கள்

கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ ஏடுகளின்படி பின்வரும் ஏழு நபர்கள் அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்தனர்:

  • திருத்தந்தை ஐந்தாம் கிளமெண்ட்: 1305–1314 (மார்ச் 9, 1309 முதல்)
  • திருத்தந்தை இருபத்திரண்டாம் யோவான்: 1316–1334
  • திருத்தந்தை பன்னிரண்டாம் பெனடிக்ட்: 1334–1342
  • திருத்தந்தை ஆறாம் கிளமெண்ட்: 1342–1352
  • திருத்தந்தை ஆறாம் இன்னசெண்ட்: 1352–1362
  • திருத்தந்தை ஐந்தாம் அர்பன்: 1362–1370 (உரோமையில் 1367-1370 வரை ஆட்சிசெய்தாலும் பின்னர் 1370இல் அவிஞ்ஞோனுக்கு திரும்பினார்)
  • திருத்தந்தை பதினொன்றாம் கிரகோரி: 1370–1378 (செப்டம்பர் 13, 1376இல் அவிஞ்ஞோன் நகரினை விடுத்து உரோமைக்கு வந்தார்)

அவிஞ்ஞோனிலிருந்து ஆட்சி செய்த எதிர்-திருத்தந்தையர்கள்:

1403இல் பதின்மூன்றாம் பெனடிக்ட் அவிஞ்ஞோனிலிருந்து நாடுகடத்தப்பட்டார். இவருக்கு பின் இவரின் வாரிசாக உறிமைகொன்டாடிய மூவரும் அவிஞ்ஞோனில் தங்கவில்லை. ஆகவே பின்வருவோர் அவிஞ்ஞோன் திருத்தந்தை எனப்பட வாய்ப்பில்லை. இவர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் குறைந்திருந்தது என்பதும் குறிக்கத்தக்கது.

  • எட்டாம் கிளமெண்ட்: 1423–1429 (அரகோன் பேரரசால் ஏற்கப்பட்டாலும்; இவர் பணிதுறந்தார்)
  • பதினான்காம் பெனடிக்ட் (பெர்னார்டு கார்னியர்): 1424–1429 or 1430
  • பதினான்காம் பெனடிக்ட் (ஜீன் கெரியர்): 1430?–1437

மேற்கோள்கள்

  1. The Avignon Papacy, P.N.R. Zutshi, The New Cambridge Medieval History: c. 1300-c. 1415, Vol. VI, Ed. Michael Jones, (Cambridge University Press, 2000), 653.
  2. Adrian Hastings, Alistair Mason and Hugh S. Pyper, The Oxford Companion to Christian Thought, (Oxford University Press, 2000), 227.
  3. Catholic Encyclopaedia entry para 7
  4. Joseph F. Kelly, The Ecumenical Councils of the Catholic Church: A History, (Liturgical Press, 2009), 104.
  5. Eamon Duffy, Saints & Sinners: A History of the Popes, (Yale University Press, 1997), 165.
  6. The History of the Council of Constance, page 403, Stephen Whatley, Jacques Lenfant, published by A. Bettesworth, 1730.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.