அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம்

அமிர்தகழி மாமாங்கப் பிள்ளையார் ஆலயம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலுள்ள அமிர்தகழி எனும் இடத்திலுள்ள பிள்ளையார் கோயில் ஆகும்.

ஆலய அமைவிடமும் அமைப்பும்

இக்கோயில் மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்கே 2 மைல் தூரத்தில் மாநகரசபை எல்லையிலுள்ள அமிர்தகழி எனும் ஊரில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிவலிங்கம் உள்ளது. எனினும் விநாயகர் அங்கியுடனே சிவலிங்கம் காட்சி தருவதால் அடியார்களால் மாமாங்கப் பிள்ளையார் என்றே மூலமூர்த்தி போற்றப்படுகின்றார். கர்ப்பக்கிருகத்தோடு அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தம்ப மண்டபம், கொடித்தம்பம், வசந்த மண்டபம், முன் மண்டபம் என்பவற்றோடு நவக்கிரகங்களுக்கு தனியான கோயிலுடன் கம்பீரமாக இவ்வாலயம் காட்சியளிக்கிறது.

மாமாங்கேஸ்வரர் ஆலயம் தென்னை, ஆல், அரசு, வேம்பு, குருந்து, கொக்கட்டி முதலான அடர்ந்த மரங்களின் நடுவே அமைதியான சூழலில் நெய்தல் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் நேர்வாசலில் குருந்த மரம் ஒன்று உள்ளது. ஆலயத்திற்கும் அதன் வடபுறத்தேயுள்ள அமிர்தகழி எனும் ஊர்மனைக்கும் இடையில் தாமரைப் பூக்கள் நிறைந்த மாமாங்கத் தடாகம் உள்ளது. இதுவே இவ்வாலயத்தின் தீர்த்தக் குளமாகும்.

ஆலய வரலாறு

இராமாயணத்தில் இராமன், இலங்கை அரசன் இராவணனைப் போரில் வென்று, சீதையை சிறைமீட்டு அயோத்தி திரும்பும் வழியில் தற்போது இத்தலம் அமைந்துள்ள இடத்தில் ஓய்வெடுத்ததாகவும், சிவபூசை செய்து வழிபட சிவலிங்கம் ஒன்றை எடுத்துவர அனுமனை அனுப்பியதாகவும், அனுமன் சிவலிங்கம் கொண்டுவர தாமதமானதால் அங்கிருந்த மண்ணினால் இலிங்கம் செய்து சிவபூசை செய்ததாகவும், தனது கோதண்டத்தை நிலத்தில் ஊன்றி பூசைக்கு தேவையான தீர்த்தத்தினை பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. தாமதமாக வந்த அனுமனால் எடுத்து வரப்பட்ட இலிங்கத்தினை கோதண்டத்தை ஊன்றிய இடத்தில் புதைத்ததாகவும் வரலாறு. இராமபிரானால் செய்யப்பட்ட இலிங்கமே ஆலயத்தில் மூல மூர்த்தியாக உள்ளதுடன் அனுமனால் கொண்டுவரப்பட்ட இலிங்கம் புதைக்கப்பட்ட இடமே அங்கு அமைந்துள்ள தீர்த்தக் குளமுமாகும்.

அடிப்படையில் இவ்வாலயம் ஓர் சிவாலயமெனினும், இறைவனே கனவில் தோன்றி பிள்ளையாருக்கு ஆராதிக்கும்படி கட்டளையிட்டதாகவும் அப்போதிருந்து இங்கு பிள்ளையாருக்கு பூசைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகின்றது.

ஆலய நிர்வாகம் கோட்டைமுனைப் பகுதி வேளாளர் பரம்பரையினருக்கும், அமிர்தகழி பகுதி ஏழூர்க் குருகுல வம்சத்தவர்களுக்குமே உரிமை உடையது. (1880ஆம் ஆண்டுப் பரம்பரையினர்)

ஆலய தீர்த்தக் குளம்

ஆலயத்தின் கிழக்கே தீர்த்தக்குளம் அமைந்துள்ளது. இக்குளத்திலேயே ஆண்டு தோறும் ஆடி அமாவாசை தினத்தன்று மாமாங்கேஸ்வரரின் தீர்த்தத் திருவிழா இடம்பெறுகின்றது. இத்தினத்திலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இத் திருவிழாவில் கலந்து கொள்வதுடன் பிதிர்க்கடன் நிறைவேற்றுவதும் சிறப்பம்சங்களாகும்.

இவ்வாலயத்தின் தீர்த்தக் குளம் இராமபிரானால் தோண்டப்பட்டதாலும், அனுமன் கொண்டு வந்த இலிங்கம் அங்கே புதைக்கப்பட்டதாலும், நோய்கள் பல தீர்க்கும் அற்புத சக்திகளையுடையது. இக்குளத்தில் காணப்படும் சந்தனச் சேறும் பல அரிய வைத்திய குணங்களுடையதெனவும், பல்வேறுபட்ட சரும நோய்களுக்குரிய நிவாரணி எனவும் நம்பப்படுகிறது.

நித்திய நைமித்திய வழிபாடுகள்

நித்திய பூசை

இவ்வாலயத்தில் தினமும் மூன்று வேளைகள் பூசை நடைபெறுகிறது.

மகோற்சவம்

மகோற்சவம் ஆடி அமாவாசைக்குப் பத்துத் தினங்களுக்கு முன்னர் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி ஆடி அமாவாசை அன்று தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடைகின்றது.

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.