அத்தி அரசன்

அத்தி ( pronunciation) என்பவன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவனைச் சேரர் படைத்தலைவன் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர்.[1]

குடவாயிற் கீரத்தனார், இவனைப்பற்றிய செய்திகளை அளித்துள்ளார்.

பெரும்பூட் சென்னி என்னும் சோழ வேந்தனை ஏழுபேர் கூட்டாகச் சேர்ந்து தாக்கினர். இந்த எழுவர் கூட்டுக்குழுவில் அந்த அத்தியும் ஒருவன். போர் கட்டூர் என்னுமிடத்தில் நடைபெற்றது. சோழர் படையின் தலைவனாக நின்று பழையன் என்பவன் போரிட்டான். போரில் பழையன் கொல்லப்பட்டான். எனவே சென்னி வேந்தன் தானே படைக்குத் தலைமையேற்றுப் போர் புரிந்தான். அவன் போரிட்டபோது அவனை எதிர்த்த ஏழு பேரில் ஆறு பேர் ஓடிவிட்டனர். கணையன் என்பவன் மட்டும் சோழனிடம் பிடிபட்டான். சோழன் கணையனைப் பிடித்துக்கொண்டு வந்து தன் நாட்டிலிருந்த கழுமலம் என்னும் ஊர்ச்சிறையில் அடைத்துவைத்தான். (அகநானூறு 44)

மேற்கோள்கள்

  1. (பேராசிரியர் சு. வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், சிறப்புப்பெயர் அகராதி)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.