கபிலை கண்ணிய வேள்வி நிலை

தொல்காப்பியம் புறத்திணையின் 7 பிரிவுகளில் ஒன்றாகிய பாடாண்திணையின் துறைகளில் ஒன்றாக இந்தக் கபிலை கண்ணிய வேள்வி நிலையைக் குறிப்பிடுகிறது. [1]

கபிலை என்பது பசுமாடு.

இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் புறத்திணையைப் 12 திணைகளாகப் பகுத்துக்கொண்டுள்ள புறப்பொருள் வெண்பாமாலை நூலிலுள்ள பாடல் ஒன்றை எடுத்துக்காட்டாகத் தருகிறார். அந்தப் பாடல்

பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கோ(டு)
இடிமுரசத் தானை இகல்இரிய எங்கோன்
கடிமுரசம் காலைசெய் வித்து [2]

பாடல் சொல்லும் செய்தி

அரசன் முரசு முழக்கத்துடன் பார்ப்பார்க்குப் பொன்னைத் தானமாக வழங்கியதோடு கபிலை என்னும் ஆனிரைகளையும் பரிசாக வழங்கினான்.

வரலாறு

பதிற்றுப்பத்து ஆறாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தண்டாரணியத்துப் பிடித்துவந்த வருடை ஆடுகளைத் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து அவற்றையும், கபிலையையும் பார்ப்பார்க்கு வழங்கினான். [3]

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் பொருளதிகாரம் நூற்பா 87.
  2. புறப்பொருள் வெண்பாமாலை, பாடாண்-திணை, பாடல் 14
  3. பதிற்றுப்பத்து, பதிகம் 6
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.