ஸ்ரீராம் (நடிகர்)
ஸ்ரீராம் என்னும் மதுரை ஸ்ரீராமுலு நாயுடு என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் மொத்தம் 23 படங்களில் நடித்துள்ளார்.[1]
வாழ்க்கை
இவர் மதுரையில் பிறந்து வளர்ந்த பட்டதாரி, திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தார். ஜெமினி ஸ்டுடியோவில் வாய்ப்புக் கேட்டுப் போனார். அங்கு முதலில் கூட்டத்தோடு கூட்டமாக நடிக்கும் வசனம் ஏதும் இல்லாத துணை நடிகராகத்தான் வாய்ப்புகள் வந்தன. அவற்றில் ஒன்று ஜெமினியின் பிரம்மாண்ட காவியமாகிய சந்திரலேகாவில் குதிரை வீரனாக அவர் நடித்தார்.
சந்திரலேகா படம் தயாரிப்பில் இருக்கும்போது எழுத்தாளர், இயக்குநர் கே. வேம்புவுடன் ஸ்ரீராமுக்கு அறிமுகம் கிடைத்தது. சந்திரலேகா வெளியான அதே ஆண்டில் வேம்பு கதை, வசனம் எழுதி இயக்க, மெட்ராஸ் டாக்கீஸ் சௌந்தரராஜன் தயாரித்து வெளியிட்ட மதனமாலா (1948) படத்தில் ஓர் ராஜகுமாரனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதைத் தொடர்ந்து நவஜீவனம், சம்சாரம், மலைக்கள்ளன் படத்தில் எதிர் நாயகனாகவும், பழனி படத்தின் சிவாஜி கணேசனின் தம்பியாகவும் நடிதாதார். கடைசியாக அவர் நடித்தப்படம் மர்ம வீரன் ஆகும் இப்படத்தை ஸ்ரீராமே தயாரித்து நடித்தார் இப்படம் தோல்வியைத் தழுவ பெரும் பொருள் இழப்புக்கு ஆளானார்.
மேற்கோள்கள்
- பிரதீப் மாதவன் (2017 அக்டோபர் 6). "குறைவான படங்கள், நிறைவான நடிப்பு". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 6 அக்டோபர் 2017.