வெள்ளெருக்கிலையார்

வெள்ளெருக்கிலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 233, 234 ஆகிய இரண்டு பாடல்கள் இவரால் பாடப்பட்டுள்ளனவாகச் சங்கத்தொகை நூல்களில் உள்ளன.

செய்திகள்

இவர் தம் இரண்டு பாடல்களிலும் வேள் எவ்வி என்னும் என்னும் வள்ளலைப் பாடியுள்ளார். இவன் ஓர் அரசன். இவன் இறந்தபின் அவனை எண்ணி இரங்கிய கையறுநிலைப் பாடல்கள் இவை.

புறம் 233

எவ்வி பகைவர்களை அழிக்கும் பெரும் படையை உடையவன். அவன் பெரும்பூண் எவ்வி என்று சிறப்பிக்கப்பட்டவன். தன்னிடம் பரிசில் நாடி வந்தவர்களுக்கு யானைகளைத் தாராளமாக வழங்கியவன். பெரும்பாண் எனப்படும் பாணர்களின் பெருங்கூட்டத்தின் ஒக்கலுக்கு(உறவினர்களுக்கு)த் தலைவன். அதாவது பாணர் கூட்டத் தலைவன்.

அகுதை

அகுதை ஒரு போர்வீரன். பகைவர்கள் தாக்கிய 'திகிரி'(சக்கரப்படை) இவன் மார்பைத் தாக்கிப் பெரும்புண்ணுடன் கிடந்தான் என்னும் செய்தி இவனைப்பற்றிப் பரவியது. இது உண்மை அன்று. பொய்ச்செய்தி.

கையறுநிலை

அகுதையைப் பற்றிய பொய்ச்செய்தி போல எவ்வி புண்ணுற்றான் என்னும் செய்தியும் பொய்யாக இருக்கக்கூடாதா என்பது புலவரின் ஏக்கம்.

புறம் 234

புலவர் புரட்சி

எவ்வி தனியே உண்ணமாட்டான். பலரோடு சேர்ந்தே உண்ணும் பழக்கம் உள்ளவன். அவன் இறந்தபின் அவனது மனைவி படைக்கும் உணவை மட்டும் தனியே உண்பானா? எங்கே உண்டான்? யார் பார்த்தது?

சடங்கு

இறந்தவனுக்குச் சடங்கு செய்யும் அவனது மனைவி யானையின் காலடி அளவு இடத்தை மெழுகுவாள். அதன்மேல் தருப்பைப் புல்லை வைப்பாள். அந்தப் புல்லின்மேல் சோற்றுப்பிண்டம் வைத்து இறந்த அவளது கணவனுக்குப் படைப்பாள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.