வினையெச்சம்
தமிழில் பத்து வகையான எச்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று வினையெச்சம் (வினை-எச்சம்). வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். வினையெச்சம் இருவகைப்படும். அவை தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பன.
தெரிநிலை வினையெச்சம்
காலத்தையும், செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்
எ.கா: படித்துத் தேறினான்
குறிப்பு வினையெச்சம்
காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும்
எ.கா: மெல்ல நடந்தான்
வினையெச்சப் புணர்ச்சி
பொதுவாக வல்லினம் வந்து புணரும்போது குற்றியலுகரத்தில் முடியும் வினையெச்சங்களில் மென்-தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் ஒற்று மிகா. ஏனைய அனைத்து வகையான வினையெச்சங்களும் இடையொற்று மிக்கே முடியும். [1]
எடுத்துக்காட்டு
- மிகாதன
- நடந்து போனான் - மென்-தொடர்க் குற்றியலுகரம் ஒற்று மிகவில்லை.
- செய்து பார்த்தான் - இடைத்தொடர்க் குற்றியலுகரம் ஒற்று மிகவில்லை.
- மிகுவன
- பார்த்துப் படித்தான் - வன்-தொடர்க் குற்றியலுகரம் ஒற்று மிக்கது.
- மெல்லப் பேசு - குறிப்பு வினையெச்சம் ஒற்று மிக்கது.
- செய்யச் சொன்னான் - 'அ' எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது.
- செய்யாக் கிடந்தான் - 'ஆ' எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது.
- ஓடிப் போனான் - 'இ' எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது. [2]
- செய்யூஉக் கிடந்தான் - 'ஊ' எழுத்தில் முடியும் வினையெச்சம் ஒற்று மிக்கது. [3]
இவற்றையும் பார்க்கவும்
அடிக்குறிப்பு
- வினையெஞ்சு கிளவி வல்லெழுத்து மிகும் (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 2)
- இகர இறுதி வினையெஞ்சு கிளவி (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 34)
- ஊகார இறுதி வினையெஞ்சு கிளவி (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 63)
- (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 8)
- (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 20)
- (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 35)
- (தொல்காப்பியம் புள்ளி மயங்கியல் 38)