விநாயக சட்டி விரதம்

விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர்.


இந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்தல் வேண்டும். முதல் இருபது நாட்களிலும் ஒருபோது உண்டு, பிள்ளையார் கதையைப் பெரியோர்கள் சொல்லக் கேட்டுக்கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும். இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாட்களையில் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரவு. ஈழத்தில் உள்ள விநாயகர் ஆலயங்களில் இவ்விரத காலங்களில் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை, விநாயக புராணம் என்பவற்றைப் படனம் செய்யும் வழக்கம் நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது.


அனந்தன் இவ்விரதத்தை அனுஷ்டித்து துன்பம் நீங்கப்பெற்றான்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.