யாழ்ப்பாண வரலாறு

இலங்கையின் வடபகுதியில் உள்ளது யாழ்ப்பாணம். இப் பெயர் தற்காலத்தில் யாழ்ப்பாண நகரத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தையும் குறிக்கப் பயன்படுவது என்றாலும், இன்று நாம் யாழ்ப்பாண அரசு என்று குறிப்பது இவற்றிலும் பெரிய ஒரு நிலப்பகுதியை ஆகும். இது வலுவுடன் இருந்த காலத்தில், இன்றைய வடமாகாணம் முழுவதையும், கிழக்கின் பகுதிகளையும், புத்தளம் வரையிலான மேற்குக் கரையோரங்களையும் உள்ளடக்கி இருந்தது. இதனுடைய எல்லை காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது ஆயினும், இதனுடைய தலைமை இடமும், மக்கட்செறிவும் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு உள்ளேயே இருந்து வந்திருக்கிறது. யாழ்ப்பாண வரலாறு என்னும் இந்தக் கட்டுரை யாழ்ப்பாணம் என்பதற்குக் குறிப்பிட்ட எல்லையை வரையறை செய்யாமல், குறிப்பிட்ட காலங்களில் யாழ்ப்பாணம் என்ற சொல்லால் பொதுவாகப் புரிந்து கொள்ளப்பட்ட பகுதிகளினது வரலாற்றைக் கையாளுகின்றது.

யாழ்ப்பாண வரலாற்றுக் காலகட்டங்கள்

யாழ்ப்பாண வரலாற்றை வசதி கருதிப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம்.

  1. ஆரியச் சக்கரவர்த்திகளுக்கு முற்பட்டகாலம். (கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முன்)
  2. ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி 12 ஆம் நூஆ - கி.பி 1620)
  3. குடியேற்றவாத ஆட்சிக் காலம் (கி.பி 1620 - கி.பி 1948)
  4. குடியேற்றவாத ஆட்சிகளுக்குப் பிற்பட்ட காலம். ( கி.பி 1948 க்குப் பின்)

யாழ்ப்பாண வரலாற்றுச் சான்றுகள்

யாழ்ப்பாணத்தின், 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட வரலாற்றை அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்றுவரை மிக அரிதாகவே காணப்படுகின்றன. பொதுவாக, ஒரு நாட்டின் அல்லது ஒரு பகுதியின் வரலாற்றை வெளிப்படுத்துவனவான, இலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், வாய்மொழிச் சான்றுகள் முதலியவை போதிய அளவு இல்லை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.