முல்லைச் சகோதரிகள்

அறிமுகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்த மூத்தக் கலைஞர் சூ. பொன்னையா அவர்களின் மூத்த மகளாக பிறந்த புவனேஸ்வரி அவர்களும் அவரது சகோதரிகளும் முல்லைச்சகோதரிகள் என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டவர்கள். தந்தையார் சூ. பொன்னையா சிறந்த இசை நாடக மற்றும் நடனக் கலைஞர் ஆதலால் அவரிடம் சிறு வயது முதல் ஒரு குருவிடம் கற்பது போல் முறையாக பயின்றவர்கள். 'அண்ணாவியார்' என்று கலைஞர்களால் அன்பாக அழைக்கப்பட்ட இவரது தந்தையார், முள்ளியவளை கிராமத்தில் கலை வளர்த்தவரும் அனேகக் கலைஞர்களை உருவாக்கியவரும் ஆவார்.

புவனேஸ்வரி தனது கம்பீரக்குரலால் இசைக்கும் பாங்கே தனியானது. ஈழத்து மெல்லிசை பாடல்கள் முதல் சமகாலத்தில் எழுச்சிப் பாடல்கள் வரையாக நிறைய பாடல்கள் பாடியுள்ளார். திருமணத்தின் பின்னர் தனது கணவரின் பெயரையும் இணைத்து 'புவனா இரத்தினசிங்கம் என அழைக்கப்படுகிறார்.

இவரது கணவர் இரத்தினசிங்கம் ஒரு வர்த்தகர் ஆவார்.

ஆரம்பம்

தனது ஆரம்பக்கல்வியை முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கற்றார். பின் இசையை முறையாக பயின்று அதனை மாணவர்களிற்கு புகட்டி வந்தார். கர்நாடக இசையில் மிகுந்த தேர்ச்சி பெற்ற இவர் மேடைக்கச்சேரிகள் செய்வதில் திறன் படைத்தவர். தமிழிசையை உரிய அங்க நிறைவுடன் பாடவல்லவர். பண்ணிசை, மற்றும் இசை நாட்டிய ஆக்கம் முதலியவற்றையும் புரிபவர். அவரது சகோதரன் பாலசுப்பிரமணியம் மிருதங்கம் இசைக்க, சகோதரிகள் இந்திராணி வயலின் பக்க இசை வழங்க, பார்வதியுடன் பல கச்சேரிகள் புரிந்துள்ளார்.
தந்தையார் நெறிப்படுத்தி வழங்கும் 'அரிச்சந்திரா', 'சம்பூரண இராமாயணம்' முதலான இசை நாடகங்களில் புவனா உட்பட அவரது குடும்ப கலைஞர்கள் அனைவரும் பங்குபெறுவர்.

மெல்லிசைப் பாடல்கள்

இலங்கை வானொலியில் மெல்லிசை பாடகராக பிரபலம் பெற்ற இவர் தனது சகோதரிகளுடன் பல பாடல்கள் பாடியுள்ளார்.

  • இயற்கை இறைவனின்கலைக்கூடம் - முல்லை சகோதரிகள் பாடியது. இசை: ஆர்.முத்துசாமி. பாடல்- எருவில் மூர்த்தி

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.