மானுசுத் தீவு

மானுசுத் தீவு (Manus Island, மானுஸ் தீவு) என்பது பப்புவா நியூ கினியின் வடக்கே மானுசு மாகாணத்தில் அமைந்துள்ளது. இது ஆட்மிரால்ட்டி தீவுகளின் மிகப் பெரிய தீவும், பப்புவா நியூ கினியின் 5வது பெரிய தீவும் ஆகும். 2,100 கிமீ² பரப்பளவும் கொண்டது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின் படி, முழு மானுசு மாகாணத்திலும் 43,387 பேர் வசிக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இது 50,321 ஆக அதிகரித்திருந்தது.[1] மானுசு மாகாணத்தின் தலைநகர் லொரெங்காவு மானுசு தீவில் அமைந்துள்ளது. மானுசு மாகாணத்தின் மொமோட்டி விமான நிலையம் மனுசு தீவின் அருகாமையில் லாசு நேகிரோசு தீவில் அமைந்துள்ளது. லாசு நேகிரோசு தீவையும் மானுசுத் தீவையும் பாலம் ஒன்று இணைக்கிறது. உள்ளூர் மக்களைத் தவிர ஆத்திரேலியாவின் கடற்பரப்பினுள் சட்டவிரோதமாகப் படகுகளில் நுழையும் அகதிகள் பலரும் 2001 முதல் 2004 வரை இங்கு தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டனர். 2012 முதல் அகதிகள் மீண்டும் இங்கு அனுப்பப்பட்டனர்.[2] 2013 சூலையில் இரு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் படி ஆத்திரேலியாவினுள் படகுகளில் அகதிகளாக வருவோர் அனைவரும் மானுஸ் தீவிற்கு அனுப்பப்பட்டு அங்கு அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும், விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படுபவர்கள் இத்தீவிலேயே நிரந்தரமாகத் தங்க அனுமதிக்கப்படுவர். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள் சொந்த நாட்டுக்கோ அல்லது வேறெந்த நாட்டுக்கோ அனுப்பப்படுவர்.

மானுசு
ஆட்மிரால்ட்டி தீவுகள்
புவியியல்
ஆள்கூறுகள்2°5′37.28″S 146°58′17.33″E
தீவுக்கூட்டம்ஆட்மிரால்ட்டி தீவுகள்
பரப்பளவு2,100 km2 (810 sq mi)
நீளம்100
அகலம்30
உயர்ந்த ஏற்றம்718
உயர்ந்த புள்ளிடிரெம்செல் மலை
நிர்வாகம்
Papua New Guinea
மாகாணம்மானுசு மாகாணம்
பெரிய குடியிருப்புலொரெங்காவு (மக். 5,829)

மானுசு தீவு அடர்ந்த தாழ்நில வெப்பமண்டல மழைக்காடுகளைக் கொண்டது. இத்தீவின் அதி கூடிய புள்ளி டிரெம்செல் மலை ஆகும். இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 718 மீட்டர்கள் (2,356 அடி) ஆகும். மானுஸ் தீவு ஆரம்பத்தில் எரிமலைப் பிரதேசமாக இருந்தது.

மரகதப் பச்சை நத்தைகள் மானுசு தீவில் மட்டுமே கிடைக்கின்றன. இவற்றின் ஓடுகள் நகைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வரலாறு

இரண்டாம் உலகப் போரின் போது மானுசுத் தீவு ஆத்திரேலியப் படையினரின் கண்காணிப்புத் தளமாகச் செயல்பட்டது.,[3]. இவர்களே உள்ளூர் மக்களின் மருத்துவத் தேவைகளையும் கவனித்து வந்தனர்.[4] 1942 சனவரி 25 இல் சப்பானியர்களின் முதல் குண்டு இங்கு போடப்பட்டது. இங்கிருந்த வானொலிக் கொடிக்கம்பமே அவர்களின் முக்கிய இலக்காக இருந்தது.[3] 1942 ஏப்ரல் 8 இல் சப்பானியப் படையினர் லொரெங்காவு துறைமுகத்தில் தரையிறங்கி ஆத்திரேலியரின் கட்டுப்பாட்டில் இருந்த தீவினுள் நுழைந்தனர். ஆத்திரேலியரின் எணிக்கை குறைவாக இருந்ததனால், அவர்கள் பின்வாங்கி கட்டுகளினுள் மறைந்திருந்தனர்.[3]

1942 இன் இறுதிக் காலத்தில், சப்பான் மானுசில் இராணுவத் தளம் ஒன்றை அமைத்தது. இத்தளம் 1944 பெப்ரவரி-மார்ச்சு மாதங்களில் அமெரிக்கப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானது.[5] நேச நாடுகளின் கடற்படைத் தளம் இத்தீவின் சீயாட்லர் துறைமுகத்தில் அமைக்கப்பட்டது. இத்தளம் பின்னர் பிரித்தானிய பசிபிக் கப்பற்படையினரால் ஆதரிக்கப்பட்டு வந்தது. 1950–51 இல் சப்பானியப் போர்க் கைதிகள் மீதான விசாரணைகளின் இறுதிக் கட்டம் ஆத்திரேலியா இத்தீவிலேயே நடத்தியது.[6]

அமெரிக்க மானிடவியலாளர் மார்கரெட் மீட் என்பவர் போருக்கு முன்னரும் பின்னரும் இங்கு வசித்து வந்தார். இங்குள்ள வாழ்க்கை முறைகள் பற்றி இரு நூல்களை இவர் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. http://citypopulation.de/PapuaNewGuinea.html
  2. Matt Siegel: "Australia Adopts Tough Measures to Curb Asylum Seekers", in The New York Times, 19 July 2013
  3. Klemen, L (1999-2000). "Manus Island, experience of No. 4 Section, 'B' Platoon, First Independent Company, Australian Imperial Force". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941-1942.
  4. Klemen, L (1999-2000). "Medical Patrol on Manus Island, 1941". Forgotten Campaign: The Dutch East Indies Campaign 1941-1942.
  5. (1944).Video: Americans Win New Airbases In South Pacific Etc. (1944).Universal Newsreel.Retrieved on 21 பெப்ரவரி 2012.
  6. Piccigallo, Philip; The Japanese on Trial; Austin 1979; ISBN 0-292-78033-8, ch.: "Australia".

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.