காரியாதி

காரியாதி சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் மல்லி கிழான் காரியாதி என ஊர்ப்பெயர் அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான். மற்றும் பெரும்பெயர் ஆதி எனவும் இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவனது ஊர் மல்லி. இவனது பெயர் ஆதி. இவனது தந்தை பெயர் காரி. இந்தக் காரி கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரியாகவும் இருக்கலாம்.

இந்த ஆதி சிறந்த வாட்போர் வீரன். இவன் தன்னை நாடி வந்த புலவர்களுக்கு அவன் நாட்டுக் குடவர்குடி எயினர் தந்த மான்கறியும், சோறும் பாக்குமட்டையில் படைத்து உண்ணச்செய்து பரிசில் நல்குவானாம். [1]

ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார்.

இவனுடைய குடநாட்டில் திங்களும் நுழைய முடியாத எந்திரப்பொறிகளைக் கொண்ட சிற்றூர்கள் (குறும்பு)கள் பல இருந்தன.[2]

அடிக்குறிப்பு

  1. புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர்
    தீம் புளிக் களாவொடு துடரி முனையின்,
    மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி,
    கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்,
    பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு,
    எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப்
    பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை,
    வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
    இரும் பனங் குடையின் மிசையும்
    பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே. (புறம் 177)

  2. திங்களும் நுழையா எந்திரப் படு புழை,
    கள் மாறு நீட்ட நணி நணி இருந்த
    குறும் பல் குறும்பின் ததும்ப வைகி,
    புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர் (புறநானூறு 177)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.