மரியானா தீவுகள்
மரியானா தீவுகள் (Mariana Islands) அல்லது மரியானாஸ் என்பது பசிபிக் பெருங்கடலின் வட-மேற்கே அமைந்துள்ள 15 எரிமலைத் தீவுகளின் கூட்டம் ஆகும். ஸ்பானியர்கள் இங்கு குடியேறிய காலத்தில் ஸ்பானிய அரசியான மரியானா என்பவளின் நினைவாக 17ம் நூற்றாண்டில் இத்தீவுகளுக்கு மரியானா தீவுகள் எனப் பெயரிடப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் இத்தீவுகள் சில வேளைகளில் லாட்ரோனஸ் தீவுகள் (Ladrones Islands, "திருடர்களின் தீவுகள்") என அழைக்கப்பட்டு வந்தது.
புவியியல்

மரியானா தீவுகள் குவாமில் இருந்து 2,519 கிமீ தூரம் ஜப்பான் வரை பரந்திருந்த கடலில் மூழ்கிய ஒரு மலைத்தொடரின் தெற்குப் பகுதியாகும். இத்தீவுகள் மைக்குரோனீசியா தீவுக்கூட்டங்களின் குடும்பத்தில் ஒரு பகுதியாகும். இவற்றின் மொத்த நிலப்பரப்பு 389 சதுர மைல்கள் (1007 கிமீ²)[1].
இவை இரண்டு நிர்வாக அலகுகளைக் கொண்டுள்ளன:
- குவாம் - இது ஐக்கிய அமெரிக்காவின் பகுதி.
- வடக்கு மரியானா தீவுகள் - இவை ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஓரளவு தன்னாட்சியுடைய (பொதுநலவாய) அலகு. இவற்றில் சாய்ப்பான், தினியான் ரோட்டா ஆகிய தீவுகளும் அடங்கும்.
வரலாறு

இத்தீவுக் கூட்டத்தைக் கண்ட முதலாவது ஐரோப்பியர் பேர்டினண்ட் மகலன். இவர் உலகைச் சுற்றிவரும் தனது முயற்சியின் போது 1521 மார்ச் 6 ஆம் நாள் தெற்கில் இருந்த இரண்டு தீவுகளைக் கண்டு அதனூடே சென்றார்[2]. அவர் முதன் முதலில் குவாமின் உமாட்டாக் தீவில் தரையிறங்கினார்.
1667 ஆம் ஆண்டில் ஸ்பெயின் தனது வழமையான குடியேற்றத்தை ஆரம்பித்து அதற்கு மரியானா தீவுகள் என அதிகாரபூர்வமாகப் பெயரிட்டது. அப்போது அங்கு கிட்டத்தட்ட 40,000 முதல் 60,000 வரையான சமோரோ மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் வந்தேறு குடிகளான ஸ்பானியர்களிடம் இருந்து பெற்ற தொற்று நோய்களினால் இறந்தனர்.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- The CIA World Factbook (2006).
- Peschel, O. (1877). Geschichte des Zei killers der Entdeckungen. Stuttgart.