மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இரண்டு உள்ளன. அவை: அகநானூறு 363,[1] நற்றிணை 385.[2] கொல்லன் என்னும் சொல் பொற்கொல்லரையும், இரும்புவேலை செய்பவரையும் குறிக்கும்.

அகநானூறு 363 சொல்லும் செய்திகள்

நெல்லி

பிரிவில் வேறுபட்ட தலைவிக்குத் தோழி கூறுகிறாள்.

பொழுது போன வேளையில் அணையில் படுத்துக்கொண்டு இனைகிறாய். (தலையணையில் படுத்துக்கொண்டு மனம் வருந்துகிறாய்) பொழுது போன வேளையில் சாய்ந்திருக்கும் தாமரை போல உன் மான் போன்ற கண்கள் மருண்டு பார்க்கின்றன. உன் கண் கண்டுகளிக்கும் அழகைக் காண இதோ அவர் வந்துவிட்டார் என்கிறாள் தோழி.

நெல்லிக்காய் காற்றில் உதிர்ந்து காலை உருத்தும் வழியில் வருவோரைத் தாக்கி மறவர் வீழ்த்திய பிணத்தைத் தின்னத் தன் இனத்தைக் கழுகுகள் அழைக்கும் வழியில் அவர் வந்திருக்கிறார் என்கிறாள்.

நற்றிணை 385 சொல்லும் செய்திகள்

தலைவி எறிபுனத்தில் இருக்கிறாள். (தினைப்புனம் காவல்) தலைவன் பட்டப்பகலில் அங்கு வந்து அவளோடு இருக்கிறான். இது ஊர்மக்கள் வாயில் அலர் ஆகிறது.

இப்படித் தோழி தலைவிக்குச் சொல்கிறாள். காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு சொல்கிறாள்.

தலைவன்

மலைப்பாம்பு இரை தேரும் நள்ளிரவில் முள்ளம்பன்றியை எய்து வேட்டையாடி எடுத்துக்கொண்டு தன் வேட்டைநாயுடன் குரம்பைக் குடிக்கு மீள்கிறான்.

(எனவே அவனுக்கு இரவில் வர நேரம் இல்லை. பகலில் வருகிறான். திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது கருத்து.)

மேற்கோள்

  1. அகநானூறு 363
  2. நற்றிணை 385
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.