மகரம்

மகரம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் கடலில் வாழும் மிருகமாகும். இந்த மிருகமானது முன்பாதி முதலை, யானை, மான் போன்ற விலங்குகளின் வடிவங்களையும், பின்பாதி மீனைப் போன்றும் அமையப்பெற்றது. ஆசியா முழுவதும் பல்வேறு வடிவங்களைக் கொண்டதாக மகரம் உள்ளது. இந்து சோதிடத்தில் சுறவ இராசிக்குரியதாகவும், இராசிச் சக்கரத்தில் பத்தாவது ராசியாகவும் உள்ளது.

கங்கை தேவியின் வாகனமாக மகரம்
கஜராகோ மகர சிற்பம்

இந்துக் கடவுள்களில் கங்கை, வருணன் ஆகியோரின் வாகனமாக இந்த மகரம் அமைந்துள்ளது. இந்துக் கோயில்களில் காவலர்களாகவும், பொக்கிசப் பாதுகாவலர்களாகவும் மகரங்கள் அமைக்கப்படுகின்றன. இந்து சமயக் கோயில்களிலும் பௌத்தக் கோயில்களிலும் மகரங்கள் காணப்படுகின்றன.

மகரக்குண்டலம் என்பது மகரத்தின் உருவ அமைப்பினைக் கொண்ட காதணியாகும். இந்த மகரக்குண்டலத்தினை மணமகனுக்குப் பரிசாக தருகின்ற வழக்கம் பண்டையக் காலத்தில் இருந்துள்ளது. இந்து சமயக் கடவுளான சிவபெருமான் வலதுக் காதில் இந்த மகரக்குண்டலத்தினை அணிந்துள்ளார். திருமால், சூரிய தேவன், சண்டி ஆகியோரும் இந்த அணிகலனை அணிவர். காதலின் கடவுளாக அறியப்படும் காமதேவன் மகரக்கொடியோன் என்று அழைக்கப்படுகிறார்.

வருண தேவனின் வாகனமாக மகரம்

கோயில்களில்

இந்து சமயக் கோயில்களில் புடைப்புச் சிற்பமாகவும், தூண் சிற்பமாகவும், தோரணச் சிற்பங்களிலும் மரக விலங்கு செதுக்கப்படுகிறது. மகரத்தோரணம் என்று அழைக்கப்படும் புடைப்புச் சிற்பத்தில் இரண்டு மகரங்கள் தோணத்தினைக் கொண்டுள்ளவாறு அமைக்கப்படுகிறது.

இசைக்கருவி

யாழ் எனும் இசைக்கருவியின் வகைகளுள் ஒன்றாக மகரயாழ் அறியப்படுகிறது.[1] இந்த யாழ் 17 அல்லது 19 நரம்புகளைக் கொண்டதாகும். மகரயாழ் யவனத்திலிருந்து கொண்டுவரப்பட்டதாக பெருங்கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரங்கள்

  1. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=109
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.