பேர்சி பிறவுன்
பேர்சி பிறவுன் இந்தியக் கட்டிடக்கலை தொடர்பில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவராகும். இவர் கல்கத்தாவில் அரசாங்க கலைக் கல்லூரியில் அதிபராகப் பணிபுரிந்தவர். கல்கத்தா அரசாங்க ஓவியக் காட்சியகத்தின் பொறுப்பாளராகவும், விக்டோரியா நினைவு மண்டபத்தின் செயலாளராகவும் பணிபுரிந்திருக்கிறார். தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை இந்தியக் கலைகளை, விசேடமாகக் கட்டிடக்கலை பற்றி ஆராய்வதில் செலவிட்டார். இந்த ஆய்வுகளின் பயனாக அவர் எழுதிய நூல்கள் இத்துறைகளில் அவர் எய்திய பாண்டித்தியத்துக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
"இந்திய ஓவியங்கள்" (Indian Paintings), "மொகலாயர்களின் கீழ் இந்திய ஓவியங்கள்" (Indian Paintings Under Moghuls) என்னும் இரு நூல்களை எழுதி வெளியிட்டார். இவர் எழுதிய நூல்களுள் இந்தியக் கட்டிடக்கலை பற்றி அவர் எழுதிய இந்தியக் கட்டிடக்கலை என்னும் நூல் புகழ் பெற்றது. இந் நூல், இந்தியக் கட்டிடக்கலை (பௌத்த மற்றும் இந்துக் காலகட்டம்), இந்தியக் கட்டிடக்கலை (இஸ்லாமியக் காலகட்டம்) என இரு பாகங்களாக வெளியிடப்பட்டது.