பெரும்பாக்கன்

பெரும்பாக்கன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 296 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது. பெரும்பாக்கம் ஊரினர் ஆதலால் பெரும்பாக்கன் என்னும் பெயரினைப் பெற்றவர் இவர்.

பாடல் சொல்லும் செய்தி

நெய்தல் திணையைச்சேர்ந்த இந்தப் பாடல் தோழி கூற்றாக அமைந்துள்ளது. தலைவன் தலைவிக்காக வெளிப்புறத்தில் காத்திருக்கிறான். அவனுக்குக் கேட்கும்படி தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

அவன் தண்ணந்துறைவன். (அவனைக் காணும் பொழுதைக் காட்டிலும் காணாப் பொழுது அதிகமாக உள்ளது. எனவே) அவனைக் கண்டால் கடுமையான சொல் எதுவும் சொல்லாதே என்று தோழி தலைவிக்கு அறிவுறுத்துகிறாள்.

அவனது தண்ணந்துறையில் புன்னைமரத்தில் இருக்கும் நாரை கழியில் இருக்கும் சிறுமீன்களைத் தின்று சலித்துப்போனால் பக்கத்தில் வயலில் விளைந்திருக்கும் நெல்லங் கதிர்களை உண்ண ஆவல் கொள்ளும். (ஒருவேளை உன் இன்பம் அவனுக்குத் திகட்டிப்போயிருக்கலாம்) - என்கிறாள்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.