புலனறிவாதம்
புலனறிவாதம் (empiricism), நிரூபணவாதம், அல்லது அனுபவவாதம் என்பது மெய்ப்பொருளை எப்படி அறியலாம் என்பதைப் பற்றிய அணுகுமுறை ஆகும்.[1] புலனறிவாதம் ஆதாரத்தையும் அனுபவத்தையும் முன்னிறுத்துகின்றது. குறிப்பாக புலங்களின் ஊடாக பெறப்படும் அறிவை இது முதன்மைப்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டுத் தோட்டத்தில் ஒரு புலி பதுங்கி இருக்கின்றது என்று ஒரு அறிஞர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அறிஞர் என்பதாலேயே அவர் சொல்வது உண்மை என்று ஆகாது. புலி பதுங்கி இருக்கின்றது என்பதற்குச் சரியான ஆதாரங்கள் வேண்டும். ஆதாரங்கள் கிடைக்கும் வரை புலி தோட்டத்தில் பதுங்கி இருக்கின்றது என்பது ஒரு வேளை உணமையாக இருந்தாலும் கூட, அதை ஏற்றுக் கொள்ள இயலாது.
புலனறிவாதத்தின்படி, மனிதனுக்கு அறிவு என்று சொல்லப்படுவது பெரும்பாலும் அவனுடைய ஐம்பொறிகளின் வழியாகவே வருகின்றது. "சூரியன் சுடுகின்றது" என்ற கருத்து (அதாவது, அறிவு) சூரியன் அவனைச் சுடுவதாலேயெ அவனுக்கு வந்தது. "நச்சுப் பாம்பு கொடியது" என்ற அறிவு பாம்பு கடித்து இறந்த பட்டறிவினாலேயே (அனுபவம்) வந்தது. மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம் பட்டறிவினால் மட்டுமே வந்தது என்றும் சொல்ல முடியாது. ஒரு சில நேரங்களில் பட்டறிவு சொல்வது தவறாகவும் இருக்கக் கூடும். சூரியன் பூமியைச் சுற்றி வருகின்றது என்பது பட்டறிவு; ஆனால் அது உண்மையன்று. பூமிதான் சூரியனைச் சுற்றி வருகின்றது. எனவே, புலனறிவாதத்தின்படி, மனிதனுக்குக் கிட்டும் அறிவு பெரும்பாலும் ஒன்று, அவனுடைய பட்டறிவினால் வந்ததாக இருக்க வேண்டும்; அல்லது அவன் அதற்கு ஆதாரங்கள் தேடிப் பெறப் பட்டதாக இருக்க வேண்டும்.
புலனறிவாதமே அறிவியலுக்கு அடிப்படை. குறிப்பாக ஆதாரபூர்வமாக, பரிசோதனைகள் மூலம் ஒரு கூற்றை நிறுவுவதைப் புலனறிவாதம் வலியுறுத்துகின்றது. அதாவது, அறிவியலில் வரும் எல்லா கூற்றுக்களும் கருத்துக்களும் புற உலகத்தில் உண்மையானவையா என்று ஆய்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்; மற்றும், ஒருவர் ஒன்றை உண்மை என்று நம்புவதாலேயோ அல்லது கடவுள் என்ற ஒரு பேராற்றல் தனக்கு ஒன்றை உணர்த்தி விட்டுச் சென்றது என்று சொல்வதாலேயோ எதுவும் உண்மையாகாது. எதுவாயினும் அதற்கு ஆதாரங்கள் இருக்க வேண்டும்.
அறிவு என்பது எப்போதுமே சரியாக இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுகின்றது என்பது நேற்று வரை உண்மையாக இருந்து, இன்று பொய்யாகிப் போயிருக்கலாம். உண்மையாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மை என்றோ, பொய்யாக இருப்பனவெல்லாம் நூற்றுக்கு நூறு பொய் என்றோ சொல்லவதற்கில்லை. நாளை மழை பெய்யும் என்று சொன்னால், நாளை கட்டாயமாக (நூற்றுக்கு நூறு) மழை பெய்யும் என்று சொல்வதற்கில்லை. 90% பெய்யலாம். கொஞ்ச நேரம் கழித்து, 90% பெய்யாது, 70% தான் பெய்யும் என்றும் சொல்ல வேண்டியும் இருக்கும். இவ்வாறு, உண்மையான (அல்லது சரியான) அறிவு என்று ஒன்றும் கிடையாது. அது மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது.[2]
மேற்கோள்கள்
- "Empiricism".
- Shelley, M. (2006). Empiricism. In F. English (Ed.), Encyclopedia of educational leadership and administration. (pp. 338-339). Thousand Oaks, CA: SAGE Publications, Inc.
- Markie, P. (2004), "Rationalism vs. Empiricism" in Edward D. Zalta (ed.), Stanford Encyclopedia of Philosophy, Eprint.
- Loeb, Luis E. (1981), From Descartes to Hume: Continental Metaphysics and the Development of Modern Philosophy, Ithaca, Cornell University Press}}
- Engfer, Hans-Jürgen (1996), Empirismus versus Rationalismus? Kritik eines philosophiegeschichtlichen Schemas, Padeborn: Schöningh}}
- Buckle, Stephen (1999), "British Sceptical Realism. A Fresh Look at the British Tradition", European Journal of Philosophy, 7, pp. 1–2.
- Peter Anstey, "ESP is best", Early Modern Experimental Philosophy, 2010.