புரைமக் களி
ஜெல் எனப்படும் அரைத்திண்ம பதார்த்தத்திலிருந்து உருவாக்கப்படும் ஒரு பொருளே 'எய்ரோஜெல்' எனப்படுகின்றது. ஜெல் பதார்த்தத்தில் திண்மம் மற்றும் திரவ நிலையில் சேர்மானங்கள் காணப்படும். ஆனால் எய்ரோஜெல்லில் திரவப் பகுதிக்குப் பதிலாக வாயு காணப்படும்; அதாவது திண்மம் மற்றும் வாயு நிலைச் சேர்மானங்களால் உருவாக்கப்படுவதே எய்ரோஜெல் எனப்படும். இதன் ஒளியை சிறிதளவு ஊடுபுகவிடும் தன்மை காரணமாக இதனை "உறைந்த புகை" , "உறைந்த வளி", "நீலப் புகை" னவும் அழைப்பர். இதன் நிறை மிகவும் குறைவானதாகும்.

இதனை ஸாமுவல் ஸ்டீஃபன் கிஸ்ட்லர் என்பவர் 1931ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். எய்ரோஜெல்கள் ஜெல்லில் உள்ள திரவப் பகுதியை மிக மெதுவாக ஆவியாக்குவதன் மூலம் உருவாக்குவர். இதனை supercritical drying என அழைப்பர். முதலில் உருவாக்கப்பட்ட எய்ரோஜெல்கள் சிலிக்கா ஜெல்லில் இருந்து உருவாக்கப்பட்டன.
பண்புகள்


எய்ரோஜெல் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் அவை மிகவும் ஈரமற்ற உறுதியான பொருட்களாகும். இவை சாதாரண ஜெல்லினுடைய எந்தக் குணத்தையும் கொண்டிருப்பதில்லை. இவற்றின் நுண்ணிய அமைப்பு மிகவும் உறுதியாக இருப்பதால் இவை பாரியளவு பாரத்தையும் தாங்கக் கூடியவை. எனினும் சில வகை எய்ரோஜெல்கள் கண்ணாடி போல உடையக்கூடியவை. இவை வெப்பப்பரிமாற்றத்தை பெருமளவில் தடுக்கக்கூடியவை. மூன்று வெப்ப ஊடுகடத்தல் முறைகளில் (கடத்தல், மேற்காவுகை, கதிர்வீச்சு) இரண்டைப் பெருமளவில் தடுக்கும். எய்ரோஜெல்லில் இருக்கும் வளி வெப்பத்தைக் கடத்தாதலால் கடத்தல் முறையில் வெப்பம் மிக அரிதாகவே இதனூடாக பயணிக்கும். அதிலும் சிலிக்கா எய்ரோஜ்ல்லில் உள்ள சிலிக்கா வெப்ப அரிதில் கடத்தி என்பதால் இதன் வெப்பக்கடத்தும் தன்மை மெலும் குறைவாகும். இதன் திண்மப் பகுதி வளியோட்டத்தைத் தடுப்பதால் மேற்காவுகை நடைபெற வாய்ப்பில்லை.
பயன்பாடு
- வீடுகளில் வெப்ப இழப்பைத் தடுக்க ஒளி ஊடுபுக விடும் சிலிக்கா எய்ரோஜெல் பயன்படுகிறது.