புது வரலாற்றியல் திறனாய்வு

புது வரலாற்றியல் திறனாய்வு என்பது, புது வரலாற்றிய இலக்கியக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட திறனாய்வு ஆகும். புது வரலாற்றியக் கொள்கையின்படி, இலக்கியத்தை ஆராயும்போது அல்லது திறனாய்வு செய்யும்போது அது எழுந்த காலப் பின்னணியை மட்டுமன்றி அதைத் திறனாய்பவரின் காலப் பின்னணியும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.[1] வரலாற்றியத்தை விடப் புது வரலாற்றியம் இலக்கியத்தைப் பரந்த வரலாற்றுச் சூழலில் நோக்குகிறது.

புது வரலாற்றிய நிலைப்பாடு

வரலாற்றைப் புறவயமாக நோக்க முடியும் என்று புது வரலாற்றியம் நம்புவதில்லை. மிகவும் அடிப்படையான வரலாற்றுத் தகவல்களேயன்றித் தெளிவான தகவல்கள் கிடைப்பதில்லை. இதனால், வரலாற்று நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் அதை ஆய்வு செய்பவரின் விளக்கங்களாகவே அமையுமேயன்றி உண்மைகளாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அத்துடன், இவ்விளக்கங்கள் ஆய்வாளரின் காலத்துக் கருத்துக்களின் தாக்கங்களுக்கு உட்பட்டிருக்கும்.[2] மேற்படி காரணங்களால் காலம் மாற்றமடையும்போது குறித்த ஒரு இலக்கியம் பற்றிய புரிதலும் மாறும் என்பதைப் புது வரலாற்றியம் ஏற்றுக்கொள்கிறது. இதனால், படைப்பாளியின் காலப் பின்னணி எவ்வாறு இலக்கியப் படைப்பைப் பாதித்தது என்பதையும், எப்படி அவ்விலக்கியம் அதன் காலத்தைப் பிரதிபலிக்கிறது என்றும் ஆராயும் அதே வேளை, திறனாய்பவரின் காலப் பின்னணி அவரின் முடிவுகளில் தாக்கம் கொண்டிருக்கும் என்பதையும் புது வரலாற்றியம் கவனத்தில் கொள்கிறது.[3]

குறிப்புக்கள்

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.