பணியமர்த்தல் சர்ச்சை

பணியமர்த்தல் சர்ச்சை அல்லது பணியமர்த்தல் போட்டி என்பது நடுக் கால ஐரோப்பாவில் சுமார் 11ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டுவரை திருச்சபைக்கும் அரசுக்கும் இடையே நிகழ்ந்த சச்சரவினைக்குறிக்கும். திருச்சபையின் உயர் அதிகாரிகளான ஆயர்களையும், ஆதீனத்தலைவர்களையும் பணியமர்த்தும் அதிகாரம் திருத்தந்தைக்கா அல்லது நாட்டின் அரசருக்கா என்பது குறித்தே இச்சிக்கல் நடந்தது. 1122இல் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் ஹென்றி மற்றும் திருத்தந்தை இரண்டாம் கலிஸ்டஸுக்கும் இடையே நடந்த உடன்பாட்டினால் (Concordat of Worms) இச்சிக்கல் முடிவுக்கு வந்தது. இவ்வுடன்பாடு உலகுசார் அதிகாரத்தையும், ஆன்மீக அதிகாரத்தையும் பிரித்துக்காட்டி ஆயர்களை நியமிப்பதில் அரசருக்கு மிகவும் குறுகிய அதிகாரமே உள்ளது எனவும் திருத்தந்தைக்கே அவ்வதிகாரம் கடவுளின் பதில் ஆள் என்னும் முறையில் உள்ளது எனவும் நிலைநாட்டியது.

இச்சிக்கலானது முதலில் திருத்தந்தை ஏழாம் கிரகோரி (1072–85) மற்றும் புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஹென்றிக்கு (1056–1106) இடையே நிகழ்ந்தாலும்[1], திருத்தந்தை இரண்டாம் பாஸ்கால் மற்றும் இங்கிலாந்தின் முதலாம் ஹென்றிக்கும் இடயே 1103 முதல் 1107 வரையிலும் நிகழ்ந்தது. இதன் தாக்கம் பிரான்சிலும் காணப்பட்டது.

மேற்கோள்கள்

  1. Rubenstein, Jay (2011), Armies of Heaven: The First Crusade and the Quest for Apocalypse, Basic Books, p. 18, ISBN 0-465-01929-3.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.