பஞ்சலோக சிலைகள்

சில்ப சாஸ்திரம், மானசாரா, அபிலாசித்தார்த்தா சிந்தாமணி ஆகிய நூல்களில் பஞ்சலோகம் பற்றியும் சிலை செய்யும் விதிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. செம்பு, வெள்ளி, தங்கம், துத்தம், ஈயம் (copper, silver, gold, zinc and lead) ஆகிய ஐந்து உலோகங்கள் மிக உயர்ந்தவை என்றும், இவை ஐந்தும் கலந்தது பஞ்சலோகம் என்றும் இந்நூல்கள் கூறுகின்றன.

பஞ்சலோக சிலை

ஆனால் அருங்காட்சியகத்தில் உள்ள பல்வேறு காலத்திய பஞ்சலோக சிலைகளில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வுகளிலிருந்து தங்கம், வெள்ளி ஆகிய உலோகங்கள் கலந்திருப்பதாக கண்டறியப்படவில்லை. பல்வேறு நூற்றாண்டுகளில் செய்யப்பட்ட சிலைகளின் உலோகக் கலவை பற்றிய பட்டியல் கீழே.

பஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்

பஞ்சலோக சிலைகளின் இரசாயன ஆய்வு முடிவுகள்

உலோகங்கள் கி.பி. 9ம் நூற்றாண்டு கி.பி. 10-11ம் நூற்றாண்டு கி.பி. 13ம் நூற்றாண்டு கி.பி. 15ம் நூற்றாண்டு கி.பி. 17ம் நூற்றாண்டு
செம்பு
Copper
83 - 39 86 - 88 91 - 05 96 - 29 91 - 25
தகரம்
Tin
16 - 61 10 - 44 2 - 86 2 - 58 6 - 66
ஆர்செனிக்
Arsenic
Tr Tr Tr Tr Tr
ஈயம்
Lead
Tr 1 - 48 6 - 09 1 - 9 2
இரும்பு
Iron
Tr 1 - 19 Tr 0 - 06 0 - 07

(Source: The proceedings in the Indian Academy of Sciences, Vol. XIII, No.1, p 53 - 63, 1941)

சிலை செய்யும் முறை

முதலில் எந்த சிலையைச் செய்ய நினைக்கிறார்களோ அந்த சிலையைப் போல மெழுகில் கரு உருவாக்கப்படும். இதற்கென தனியாக மெழுகு உ்ளது. இந்த மெழுகு ஒருவகை மரத்தில் உருகி வழியும் மெழுகாகும். இதை பாலக்காட்டு மெழுகு என்பர். இந்த மெழுகில் சம அளவுக்குக் குங்கிலியம் கலந்து உருக்கி வைத்துக்கொண்டு, தேவையான அளவுக்கு மெழுகில் ஒரு சிலை உருவாக்கப்படும். காவிரிக் கரையோரம் படிந்து கிடக்கும் வண்டல் மண்ணை அள்ளிவந்து, அந்த மெழுகுச் சிலையின் மேல் பூசி வார்ப்பு செய்கிறார்கள். வார்ப்பின் கீழ்ப்பகுதியில் ஒரு சிறிய துளை வைக்கப்படுகிறது. மண் காய்ந்த பிறகு அதை அடுப்பில் வைத்து சூடாக்கி மெழுகை வெளியேற்றிவிடுவர். இந்த உள்ளீடற்ற வார்ப்பில் நன்கு உருக்கப்பட்ட ஐம்பொன்னை வார்ப்பில் உள்ள துளை வழியாக ஊற்றி, ஒருநாள் கழித்து மண்ணைத் தட்டி உடைத்து, உள்ளே உள்ள உலோகச் சிலையை எடுக்கின்றனர். பிசிறுகளோடு உ்ள இந்தச்சிலையை அதை அரம் கொண்டு தேய்த்து, சீவிளி கொண்டு சீவி, பின் நகாசு வேலை செய்கின்றனர். எல்லாம் முடிந்த பின்னர் சிலைக்குக் கண் திறக்கப்படுகிறது.[1]

சிலை திருட்டு

இந்தியாவில் இருந்து இந்த வகை விலைமதிப்பில்லா புராதனச் சிலைகள் கடத்தப்பட்டு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு விற்கப்படுகின்றன. இத்தகைய ஆயிரம் ஆண்டு பழைமையான உமாபரமேஸ்வரி சிலை 6,50,000 டாலருக்கு அமெரிக்காவில் நியூயார்க் நகரிலுள்ள ஒரு நபருக்கு விற்கப்பட்டு, பின்னர் சிங்கப்பூர் அருங்காட்சியகத்தில் (Asian Civilization Museum) வைக்கப்பட்டது. இது பற்றிய விசாரணையில்,இந்தியாவிலிருந்து கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் மட்டுமே 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட்டது தெரிய வந்தது. அமெரிக்க அரசும், சிங்கப்பூர் அரசும் இவ்வகைத் திருட்டில் ஈடுபட்ட சுபாஷ் கபூர் மேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. [2]

அளவில் பெரிய மதிப்பில் உயர்ந்த இத்தகைய விக்கிரகங்கள் நாடு விட்டு நாடு கடத்தப்பட இந்திய காவல்துறை, சுங்கத்துறை, விமானநிலைய அதிகாரிகள் முதலானோர் எவ்வாறு அனுமதிக்கின்றனர் என்பதும் இதில் உள்ள அரசியல் மற்றும் ஊழல் முதலானவையும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

  1. வி.சுந்தர்ராஜ் (2017 திசம்பர் 3). "கல்லிலே கலைவண்ணம் காணும் ஆனந்தி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 திசம்பர் 2017.
  2. குமுதம் ஜோதிடம்; 3.1.2014; இழப்பதற்கு என்ன இருக்கிறது இனியும்? கட்டுரை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.