நோயெல் இம்மானுவேல்

பேரருட்திரு கிறித்தியான் நோயெல் இம்மானுவேல் (Christian Noel Emmanuel, பிறப்பு: 25 டிசம்பர் 1960) இலங்கைத் தமிழ் கத்தோலிக்க குருவும், திருகோணமலை மறைமாவட்டத்தின் தற்போதைய உரோமன் கத்தோலிக்க ஆயரும் ஆவார்.

பேரருட்திரு
நோயெல் இம்மானுவேல்
Noel Emmanuel
திருகோணமலை மறைமாவட்ட ஆயர்
சபைகத்தோலிக்க திருச்சபை
மறைமாநிலம்கொழும்பு
மறைமாவட்டம்திருகோணமலை
ஆட்சி துவக்கம்3 சூன் 2015
முன்னிருந்தவர்கிங்ஸ்லி சுவாம்பிள்ளை
பிற தகவல்கள்
பிறப்பு25 திசம்பர் 1960 (1960-12-25)
திருக்கோணமலை, இலங்கை

வாழ்க்கைச் சுருக்கம்

இம்மானுவேல் அடிகள் திருகோணமலையில் பெரியகடை என்னும் இடத்தில் ஜூவகின் இம்மானுவேல், டொனேட்டா மேரி ஆகியோருக்கு நான்காவது பிள்ளையாக 1960 டிசம்பர் 25 இல் பிறந்தார்.[1] தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் பயின்று, தந்தையின் பணி இடமாற்றத்தை அடுத்து புத்தளம் புனித மரியாள் பாடசாலையில் இரண்டு ஆண்டுகள் பயின்று மீண்டும் திருகோம்ணமலை திரும்பி, அங்கு புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்வகுப்பில் கல்வி பயின்றார்.[1][2][3][4] பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் புனித யோசப்பு இளைய மடப்பள்ளியில் சேர்ந்தார். பின்னர் 1978-81 இல் கண்டி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மெய்யியல் பட்டம் பெற்றார்.[3][4] பின்னர் திருச்சி புனித பவுல் மடப்பள்ளியில் (1983-86) சேர்ந்தார்.[3][4]

பணி

1985 மார்ச் 12 இல் திருத்தொண்டராகவும், 1986 மே 21 இல் குருவாகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.[2][3][4] அதன் பின்னர் மட்டக்களப்பு மறைமாவட்ட முதன்மைப்பேராலயம்(1986-88), இருதயபுரம் (1988-89), அக்கரைப்பற்று (1989-93) ஆகிய ஆலயங்களில் பங்கு குருவாகப் பணியாற்றினார்.[3][4] 1999 - 2001 காலப்பகுதியில் ரோம் நகரில் அர்பேனியானா பல்கலைக்கழகத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார்.[3][4] இலங்கை திரும்பிய பின்னர் கண்டி புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக (2001-11) நியமிக்கப்பட்டார்.[3][4] 2011 இல் திருகோனமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயர் பொதுப் பதில்குருவாக நியமிக்கப்பட்டார்.[3][4] 2012 இல் மறைமாவட்டத்தின் பொதுப் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.[3][4] திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஓய்வு பெற்றதை அடுத்து, இம்மானுவேல் 2015 சூன் 3 அன்று திருகோணமலை மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார்.[2][5] இவர் ஆயராகத் திருநிலைப்படுத்தப்படும் சடங்கு 2015 சூலை 24 இல் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.[6]

சமூகப் பணிகள்

'தவக்காலத்தில் இவர்களோடு' (2008) என்ற நூலையும், 'ஒப்புரவின் ஊடாக சமாதானம்' (2009) என்ற நூலையும் எழுதி வெளியிட்டார்.[1] 'தாகம்' என்ற பெயரில் கிறித்தவ சிந்தனைகள் அடங்கிய வெளியீடுகளை 2010-2011 காலப்பகுதியில் வெளியிட்டார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார். புனித சூசையப்பர் கல்லூரியின் பழைய மாணவர் சங்க கௌரவப் பொதுச் செயலாளராகவும், திருகோணமலை தமிழர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.