நொச்சி நியமங்கிழார்

நொச்சி நியமம் என்னும் ஊரில் வாழ்ந்த சங்ககாலப் புலவர் நொச்சிநியமங்கிழார். இவரது பாடல்கள் 5 சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை அகநானூறு 52, நற்றிணை 17, 208, 209, புறநானூறு 293 [1]

இவர் சொல்லும் செய்திகள்

அகம் 52

என் பசலை காமநோய் என்று தாய்க்குச் சொல்லலாமா வேண்டாமா என்று இரண்டு வகையாக எண்ணிக்கொண்டிருக்காதே. என் உயிரே போனாலும் போகட்டும். சொல்லிவிடு என்று தோழியிடம் தலைவி சொல்லுகிறாள்.

வள்ளிமரம்

வள்ளிக் கிழங்கு தன் வேரில் விளையும் வள்ளிமரங்களைக் கொண்டது காதலன் ஊர். (முள்ளங்கிக் கிழங்கு வீழ்க்கும் முள்ளங்கிச்செடி போன்றது வள்ளிமரம். வள்ளிக்கிழங்கு முள்ளங்கிக் கிழங்கு போன்ற உருவில் ஆள் பருமன் இருக்கும்)

வேங்கைமரம்

வேங்கை மரத்தின் உதிர்ந்த 'பொங்கல்' பூக்கள் பொன்னின் துகள்கள் போல உதிர்ந்துகிடக்கும்.

பூப் பறிப்போர் பூசல்

மலைவாழ் குறத்தியர் வேங்கைப் பூக்களைப் பறிக்கும்போது பூசல்(கூச்சல்) இடுவர். இந்தக் கூச்சல் இசைபோல் இனிமையாக இல்லாமல் 'இன்னா இசைய'வாக இருக்குமாம்.

நற்றிணை 17

தலைவி தன் தோழியிடம் சொல்கிறாள்.

பெண்களுக்கு நாணம் உயிரைக் காட்டிலும் சிறந்தது. அந்த நாணத்தைப் பொருட்படுத்தாமல் தாயிடம் 'வெற்பன் மார்பு அணங்கிற்று' என்று சொல்லிவிட்டேன்.

உள்ளுறை உவமம்

தலைகன் வெற்பில் காந்தள் பூவை ஊதும் வண்டின் இசை யாழிசை போல இருக்கும் என்னும் குறிப்பு தாயிடம் தலைவி தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தியதை உள்ளுறை உவமையாகக் காட்டுகிறது.

நற்றிணை 208

பிரிந்த நம்மினும் நம் தலைவர் நமக்காக இரங்கும் பண்புள்ளவர். நம் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. இதோ பெருமழை பொழிகிறது. அவர் வந்துவிடுவார். என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.

நற்றிணை 209

அவள் தினைப்புனம் காக்க வரவில்லை. என் உயிரை வாங்குகிறாள் - என்று தலைவன் நினைக்கிறான்.

புறம் 293

யானைமேல் ஏறிச்சென்று ஊர்களைத் தனதாக்கிக்கொள்ளும் அவன் நாணுடை மகளாகிய அவள்மேல் இரக்கம் கொண்டு தண்ணுமை முழங்க வந்து அவளுடைய பூப்புக்கு விலை தருவானோ மாட்டானோ? அவள் அளியள் (இரக்கம் கொள்ளத்தக்கவள்)

பழந்தமிழ்

இப் புலவர் தம் பாடல்களில் தொல்காப்பியத் தொடர்களையும். பழந்தமிழ்ச் சொற்களையும் விரும்பிப் பயன்படுத்தியுள்ளார்.

  • செப்பாதீமோ = சொல்லிவிடு
  • வலந்த வள்ளி = கிழங்கு வீழ்த்த வள்ளிமரம்

தொல்காப்பியத் தமிழ்

கொன்னும் நம்பும் குரையர் = சும்மாவே விரும்பும் குரையர்.

  • குரை - (இடைச்சொல்) 'ஏயும் குரையும் இசைநிறை அசைநிலை' - தொல்காப்பியம் 757
  • நம்பு - (உரிச்சொல்) 'நம்பும் மேவும் நசை ஆகும்மே' - தொல்காப்பியம் 812

தொல்காப்பியத் தொடர்

உயிரினும் சிறந்தன்று நாணே - தொல்காப்பியம் 1059
உயிரினும் சிறந்த நாண் - இப்பாடலில் உள்ள தொடர்

மேற்கோள்கள்

  1. நொச்சி நியமங்கிழார் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.