நளவர்

நளவர் என்போர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் உள்ள சாதிகள் பெருமளவுக்குத் தமிழ் நாட்டில் உள்ள சாதிகளோடு ஒத்திருந்தாலும், நளவர் என்னும் சாதியினர் இலங்கைத் தமிழ்ச் சமூகத்தில் மட்டும் காணப்படுகின்றனர். தீண்டத் தகாதவர்களாகக் கருதப்பட்ட இச்சாதியினர்[1] உயர் சாதியினரால் மிகவும் ஒடுக்கப்பட்டனர். இவர்கள் கல்வி கற்பதற்கும், கோவிலுக்குள் நுழைவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. மரபுவழியாக இவர்களுடைய தொழில் பனை ஏறுதலும், கள் இறக்குதலும் ஆகும். பிற்காலங்களில் வேளாண்மைக் கூலிவேலையிலும் இவர்கள் ஈடுபட்டனர். அம்பட்டர், பறையர், வண்ணார், நளவர் ஆகியோர் பஞ்சமர் என அழைக்கப்பட்டனர்.

தோற்றம்

தமிழ் நாட்டில் "நளவர்" என்னும் பெயரில் ஒரு சாதி இல்லை என்பதால், இச்சாதி இலங்கையிலேயே தோன்றியது என்ற கருத்து நிலவுகின்றது. யாழ்ப்பாண அரசுக் காலத்தில் வேளாண்மைக் கூலிகளாகத் தொழில் செய்வதற்காக சோழ நாட்டைச் சேர்ந்த பள்ளர் குடிகள் சிலர் யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும், நினைத்தபடி தொழில் அமையாததால் இவர்களிற் சிலர், சாணார் சாதியினரின் தொழிலான பனையேறும் தொழிலைப் பயின்று தொழில் புரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.[2] தமது வழமையான தொழிலில் இருந்து நழுவியதால் இவர்களுக்கு நளவர் எனப் பெயர் ஏற்பட்டதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்

  1. முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், ஏசியன் எடுகேசனல் சர்வீசஸ், சென்னை, 2002 (முதற் பதிப்பு 1915), பக். 39
  2. மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாண வைபவ மாலை, குலசபாநாதன் பதிப்பு, யாழ்ப்பாணம், 1949, பக். 92.

உசாத்துணைகள்

  • வேலுப்பிள்ளை, க., யாழ்ப்பாண வைபவ கௌமுதி, 1918, யாழ்ப்பாணம் (மறுபதிப்பு: Asian Educational Services, Delhi, 2002).
  • முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், 1912, யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம் (நான்காம் பதிப்பு, 2000, சென்னை: Maazaru DTP).
  • தைரியர், இ. ம. (குருகுலசேகர தைரியமுதலியார்) (1967). வருண நிலை. சுண்டிக்குளி, யாழ்ப்பாணம்..
  • சிவத்தம்பி, கா., யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை, 2000, கொழும்பு.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.