நம்பி குட்டுவன்

நம்பி குட்டுவன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகத்திணைப் பாடல்கள் 5 இவரால் பாடப்பட்டனவாகக் காணப்படுகின்றன. குறுந்தொகை 109, 243, நற்றிணை 145, 236, 345 ஆகியவை அவை.

குட்டுவன் சேர மன்னன்.

பாடல் தரும் செய்திகள்

குறுந்தொகை 109

தலைவன் தலைவிக்காகக் காத்திருக்கிறான். அப்படி இருந்தும் தலைவியின் நெற்றிக் கவின் தொலைந்துவிட்டது என்று ஊர் சொல்கிறது. ஏன் என்று தெரியவில்லை என்று தோழி சொல்கிறாள். (தலைவன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது அவள் சொல்லவந்த கருத்து)

குறுந்தொகை 243

வண்டல் விளையாட்டு

மகளிர் வண்டல் விளையாடுவர். அடுப்பம் பூவைக் கிண்டிக்கொண்டு விளையாடுவர்.

  • அடுப்பம் பூவின் இலை மானின் காலடி போல இருக்கும். அதன் பூ தார்மாலையில் தொங்கும் மணி போல் இருக்கும். கடற்கரை நிலத்தில் மிகுதியாகக் காணப்படும்.

நற்றிணை 145

நெய்தல் நிலத் தலைவன் தன் காதலிக்காகத் தேரில் வந்து காத்திருக்கிறான். தோழி அவனுக்குக் கேட்கும்படி சொல்கிறாள். தேரின் மணியோசையைக் கேட்டவள் போலத் தாய் 'அவன் எங்குள்ளான்' என்கிறாள் - என்கிறாள் தோழி.

  • அடுப்பங் கொடி பெரிதாக இருக்கும். அதன் பூவை மகளிர் தம் கூந்தலின் கோதை முடிப்பில் சேர்த்து வைத்துக்கொள்வர்.

நற்றிணை 236

அவன் அவளுக்காகக் காத்திருக்கிறான். அவள் தன் தோழியிடம் சொல்கிறாள். 'அவர் மலையில் விளையாடினோம். அவரோடு அருவியில் மூழ்கினோம். அது தடைபட்டதால் பசலை மேனியில் பாய்ந்து கிடக்கிறது. உள்ளத்தில் கவலை நோய். உடம்பு கொதிக்கிறது. உயிர் சிறுத்துக்கொண்டே போகிறது. இதனை அறிந்து வீட்டிலுள்ளவர்கள் முற்றத்துக்குக்கூட விட மறுக்கின்றனர்.'

நற்றிணை 345

தலைவி சொல்கிறாள். 'நான் உன்னை நம்பித் தெளிந்தேன். இப்போது அந்தத் தெளிவு கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துகொண்டிருக்கிறது.

கண்டல் காய் காம்பு இற்று ஆம்பல் மீது விழ அந்தப் பூ மலர்வது போல நான் உன்னை நம்பிய தெளிவு இருக்கிறது.'

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.