தொலைக் கட்டுப்படுத்தி

தொலைக் கட்டுப்படுத்தி அல்லது தொலை இயக்கி (ஆங்கிலம்: Remote Control) எனப்படுவது தொலைக்காட்சிப் பெட்டி, குறுவட்டு இயக்கி போன்ற இலத்திரனியற் சாதனங்களைக் குறுகிய தூரத்திலிருந்து கட்டுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இலத்திரனியற் சாதனமாகும். தொலைக் கட்டுப்படுத்தியிலிருந்து சமிக்ஞைகள் செங்கீழ்க் கதிர்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.[1] இன்றைய காலத்தில் திறக்கற்றை, குரலாளுகை என்பனவற்றின் மூலமும் சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றன.

தொலைக்காட்சியை இயக்குவதற்கான தொலைக் கட்டுப்படுத்தி ஒன்று

தொலைக்காட்சிக்கானது

தொலைக்காட்சியைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் தொலைக் கட்டுப்படுத்தி 1950ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது தொலைக்காட்சியுடன் ஒரு வடம் மூலம் இணைக்கப்பட்டது.[2] ஒரு கம்பியில்லாத் தொலைக் கட்டுப்படுத்தி 1955இல் உருவாக்கப்பட்டது. அது சூரிய மின்கலத்துக்கு ஒளியைப் பாய்ச்சுவதனூடாகச் செயற்பட்டது. ஆனால் அதனைப் பெறும் கருவியால் தொலைக் கட்டுப்படுத்தி மூலம் வழங்கப்படும் ஒளியையும் ஏனைய ஒளி முதல்களிலிருந்து வரும் ஒளியையும் வேறுபடுத்த முடியாமல் போய் விட்டது.[3] பின்னர், மீயொலியைப் பயன்படுத்திச் சமிக்ஞைகளை அனுப்பும் செனித் ஸ்பேஸ் கொமாண்ட் என்ற தொலைக் கட்டுப்படுத்தி 1956இல் உருவாக்கப்பட்டது.[4]

அலைபேசி வழியாக

கணினிகளைக் கட்டுப்படுத்துவதற்காக ஐ. ஓ. எசு.வில் ஐடியூன்ஸ் தொலைக் கட்டுப்படுத்தி, சோனி எரிக்சனில் தொலைக் கட்டுப்படுத்தி போன்ற மென்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.[5] இந்த மென்பொருள்கள் திறக்கற்றை மூலமாகச் சமிக்ஞைகளை அனுப்புகின்றன. இவ்வாறான மென்பொருட்கள் மூலம் கணினியைத் தொலைவிலிருந்தே இயக்கலாம். தொலைக் கட்டுப்படுத்தி மென்பொருளின் மூலம் கணினியில் மேசையகம், ஊடக இயக்கி, மின்னணு நிகழ்த்துகை மென்பொருள் என்பனவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.[6]

மருத்துவத் துறையில்

மருத்துவர்கள் தொலைவிலிருந்தே சத்திர சிகிச்சை செய்ய தொலைக் கட்டுப்படுத்தி உதவுகிறது இங்கிலாந்தில் உள்ள சிலன் பீல்டு என்ற மருத்துவமனையில் தொலைக் கட்டுப்படுத்தியைப் பயன்படுத்தி முதன்முதலில் 70 வயதான கென்னத்து குராக்கர் என்பவருக்குத் தொலைவிலிருந்தே சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.[7]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.