தொலமியின் உலகப்படம்

தொலமியின் உலகப்படம் (Ptolemy's world map) என்பது, கிபி 2 ஆம் நூற்றாண்டில், கிரேக்கச் சமூகத்தினால் அறியப்பட்ட உலகத்தின் நிலப்படம் ஆகும். இது கிபி 150ல் எழுதப்பட்ட தொலமியின் ஜியோகிரபிக்கா என்னும் நூலில் தரப்பட்ட விபரங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலில் வரையப்பட்ட படம் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், நூல் 1300 ஆம் ஆண்டில் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டபோது நூலில் காணப்பட்ட ஆயிரக்கணக்கான இடங்களின் விபரங்களைப் பயன்படுத்தி நிலப்படம் மீளவும் வரையப்பட்டது.

தொலமியின் உலகப்படம், 15 ஆம் நூற்றாண்டில் மீளுருவாக்கப்பட்டது.

அகலக்கோடு, நெடுங்கோடு என்பவை முதல் முதலாகப் பயன்படுத்தப்பட்டதும், வானியல் கவனிப்புக்களின் அடிப்படையில் புவியின் அமைவிடங்கள் குறிக்கப்பட்டதும் தொலமியின் நிலப்படங்களிலேயே. இது நிலப்படங்களை உருவாக்குவதில் இவற்றின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகும். 9 ஆம் நூற்றாண்டில் ஜியோகிரபிக்கா கிரேக்க மொழியில் இருந்து அரபி மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டது. அறிவியல் அடிப்படையிலானதும், எண் சார்ந்ததுமான உலகளாவிய ஆள்கூற்று முறை மத்தியகால இசுலாமிய, ஐரோப்பியச் சிந்தனைகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியது.

உள்ளடக்கம்

இந்த நிலப்படம், நாற்புறமும் நிலத்தல் சூழப்பட்ட இரண்டு கடல்களைக் காட்டுகிறது. ஒன்று நடுநிலக்கடல், மற்றது இந்தியப் பெருங்கடல். இந்தியப் பெருங்கடல் கிழக்கே தென் சீனக் கடல் வரை உள்ளது.ஐரோப்பா, மையக்கிழக்கு, இந்தியா, இலங்கை, மலாயத் தீவக்குறை, சீனா என்னும் இடங்களை இந்த நிலப்படம் உள்ளடக்குகிறது.[1]

இந்த நிலப்படமும், ஜியோகிரபிக்காவும், உரோமப் பேரரசின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்துக்குப் பெருமளவில் உதவியிருக்கக்கூடும். 2 ஆம் நூற்றாண்டு முதல் இந்தியப் பெருங்கடல் முழுவதும் விரிவான வணிக நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. பல உரோம வணிக நிலைகளை இந்தியாவில் அடையாளம் கண்டுள்ளனர்.

குறிப்புக்கள்

  1. Thrower, Norman Joseph William (1999). Maps & Civilization: Cartography in Culture and Society. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-226-79973-5.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.