தொங்கு விளக்கு

தொங்கு விளக்கு அல்லது தூக்கு விளக்கு என்பது மேலிருந்து தொங்கவிட்டுப் பயன்படுத்தப்படும் எண்ணெய் விளக்கு ஆகும். பல்வேறு வகையான விளக்குகள் இந்த வகைக்குள் அடங்குகின்றன. இவ்வகை விளக்குகள் பெரும்பாலும் பித்தளை போன்ற உலோகங்களால் செய்யப்படுகின்றன. தொங்கு விளக்குகள், வைப்பதற்கான இடத்தேவையை இல்லாமல் ஆக்குவதால், இடவசதி குறைவான இடங்களில் பயனுள்ளவையாக அமைகின்றன. அத்துடன் அலங்கார அமைப்புக்களிலும் தொங்கு விளக்குகளைப் பயன்படுத்த முடியும்.

தூண்டாமணி விளக்கு வகையைச் சேர்ந்த ஒரு தூக்கு விளக்கு

வகைகள்

சர விளக்கு, நந்தா விளக்கு, சங்குத் தூக்கு விளக்கு, ஏழு தட்டுத் தூக்கு விளக்கு, சாதாரண தூக்கு விளக்கு, சங்கிலி வால் விளக்கு, தொம்பைத் தூக்கு விளக்கு போன்ற விளக்குகள் தொங்கு விளக்கு வகைக்குள் அடங்குகின்றன.[1] சர விளக்குகள் பெரும்பாலும் கோயில்களில் கருவறை வாயிலைச் சுற்றி அலங்கரத்துக்காக அமைக்கப்படுகின்றன. நந்தா விளக்கு அல்லது தூண்டாமணி விளக்கு என அழைக்கப்படும் ஒரு வகைத் தொங்கு விளக்கு, விளக்கு எரிவதற்காகக் கூடிய அளவு எண்ணெயைக் கொண்டிருக்கக்கூடிய கலம் ஒன்றைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், அடிக்கடி எண்ணெய் விடவேண்டிய தேவையில்லாமல் நீண்ட நேரம் எரியக்கூடியது. சாதாரணத் தூக்கு விளக்கு என்பது வடிவமைப்பில் உயரம் குறைவான குத்து விளக்கைப் போன்றது. இது அதன் உச்சியில் பொருத்தப்படும் வளையம் ஒன்றின் மூலம் தொங்கவிடப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. இராகவன், அ., தமிழ்நாட்டுத் திருவிளக்குகள், சந்தியா பதிப்பகம், சென்னை, 2014. பக். 158 - 163
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.