தெம்மாங்கு

தெம்மாங்கு என்பது நாட்டுப்புறப் பாடல் இசை வகைகளுள் ஒன்றாகும். தேனின் இனிமையைப் போன்று பாடல் இனிமையாக இருப்பதனால் "தேன் பாங்கு என்பதே தெம்மாங்கு என மாறி வருகிறது" என்பர்.[1] தென் பாங்கு எனப் பொருள் கொண்டு தென்னகத்தின் பாங்கான பாடல் என்று கூறுவதும் உண்டு.[2] சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி தெம்பாங்கு, தெம்மாங்கு என இரு சொல்லாட்சிகளையும் குறிப்பிட்டு “தென்னகத்தில் நாட்டுப்புறத்தார் பாடும் இசைப் பாட்டு வகை” எனக் குறிப்பிடுகிறது. நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழகராதி தெம்மாங்கு என்பதற்கு "ஒரு வகைச் சந்தம்" எனப் பொருள் தருகிறது.[3]

நாட்டுப்புறங்களில் தனி வழியே நடக்கும் போது, வண்டி ஓட்டும்போது, வயல் வெளிப்பணிகளின் போது என எந்தச் சூழ்நிலையிலும் தெம்மாங்குப் பாடல் எழலாம். ஒருவரே பாடும் மரபும், ஒருவர் கேள்விக்கு மற்றவர் பதில் கூறும் போட்டி மரபும், ஒருவர் பாட ஏனையோர் அதனையே ஒருமித்துப் பாடும் குழுமரபும் எனப் பல்வேறு மரபுகள் இதில் உள்ளன.[4]

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. கி. வா ஜகந்நாதன். ’ஆராய்ச்சி உரை’ மலையருவி,. பக். 30.
  2. ஆறு. அழகப்பன். நாட்டுப்புறப்பாடல்கள்- திறனாய்வு. பக். 72.
  3. நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழியகராதி. சாரதா பதிப்பகம். பக். 828.
  4. மா. சா அறிவுடை நம்பி (நவம்பர் 2010). தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள். நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.. பக். 58, 59.

வெளி இணைப்புக்கள்

நாட்டுப்புறப் பாடல்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.