துன்
துன் (மலாய்:Tun), என்பது மலேசிய அரசாங்கம் வழங்கும் மிக உயர்ந்த விருதாகும். இந்த விருதை மலேசியாவின் பேரரசர் மட்டுமே வழங்க முடியும். ”ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா” (Seri Maharaja Mangku Negara (SMN))[1] விருதையும் ”ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா” (Seri Setia Mahkota (SSM))[2] விருதையும், துன் விருது என்று அழைக்கிறார்கள்[3] பொதுமக்களின் அரிய சேவைகளைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

மலேசியக் கூட்டரசு விருதுகள் பட்டியலில் ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா விருது 4ஆவது இடத்திலும், ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா விருது 5ஆவது இடத்திலும் தகுதிகள் வகிக்கின்றன. மலேசியாவில் உயிரோடு வாழ்பவர்களில் 25 பேர் மட்டுமே ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா விருதையும் ஸ்ரீ செத்தியா மாக்கோத்தா விருதையும் பெற்று இருக்க முடியும்.
துன் வீ. தி. சம்பந்தன்
துன் விருதைப் பெற்ற ஒரே இந்தியர், ஒரே தமிழர் வீ. தி. சம்பந்தன் மட்டுமே. அவருக்கு 1967ஆம் ஆண்டு அந்த விருது வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கும் துன் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் மொத்தம் 68 பேர். இவர்களில் 45 பேர் மரணம் அடைந்து விட்டனர். உயிரோடு உள்ளவர்கள் 23 பேர்.[4] 2001ஆம் ஆண்டில் பஹ்ரேய்ன் நாட்டுப் பிரதமர் துன் ஷெயிக் காலிபா,[5]2005ஆம் ஆண்டில் சுவீடன் நாட்டு இளவரசியார் வாஸ்டர் கோட்லாண்ட்[6] போன்றோர் துன் விருதைப் பெற்றுள்ளனர்.
மலாயாவில் துன் விருது வழங்கப்படுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. மலாய் அரசர்களிடையே அந்த நடைமுறை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் ஆண்களுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டு வந்தது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு பெண்களுக்கும் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்தது. துன் விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை தோ புவான் (Toh Puan) என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை துன் என்றே அழைக்க வேண்டும்.
மலேசியாவில் இதுவரை வீ. தி. சம்பந்தன் அவர்களைத் தவிர, வேறு இந்தியர்கள் எவருக்கும் துன் விருது வழங்கப்படவில்லை. மலேசியத் தமிழர்களுக்கு அது ஒரு வரலாறு.