திருத்தாமனார்

திருத்தாமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் புறநானூறு 398ஆம் பாடலாக அமைந்துள்ளது. சேரமான் வஞ்சன் என்னும் அரசனிடம் பரிசில் வேண்டி இந்தப் பாடலை இவர் பாடியுள்ளார்.

பாடலில் இவர் தரும் செய்தி

இப்பாடலில் சில அடிகள் சிதைந்துள்ளன.

வாய்மொழி வஞ்சன்

கோசர்களில் ஒரு பிரிவினர் வாய்மொழிக் கோசர் எனப் பாராட்டப்பட்டுள்ளர். எனவே இவனைச் சேரர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த கோசர்குடித் தலைவன் எனலாம்.

பாயல் கோ

பாயல் மலைப்பகுதியை ஆண்டுவந்ததால் இவன் பாயல் கோ எனப்பட்டான்.

கொடை

பாணர்கள் சீறியாழை மீட்டிக்கொண்டு கோழி கூவும் வைகறைப் பொழுதில் இவனைப் பாடுவர்களாம். இவன் அவர்களின் அழுக்குப் படிந்த ஆடைகளை நீக்கித் தான் அணிந்திருப்பது போன்ற ஆடைகளை உடுத்திவிடுவானாம். நிழலைக் காட்டும் கண்ணாடி போன்ற தேறலைப் பருகத் தருவானாம். நல்ல அரிசிச் சோற்றையும் கருணைக் கிழங்குக் குழம்பையும் வயிறார ஊட்டி மகிழ்வானாம்.

செந்தமிழ்

நகைவர், பகைவர் என்னும் சொற்கள் முறையே நண்பர்களையும், பகைவர்களையும் குறிக்கும் வகையில் இப் புலவரால் கையாளப்பட்டுள்ளன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.