தி. சதாசிவ ஐயர்

முகாந்திரம் தி. சதாசிவ ஐயர் (1882 - நவம்பர் 27, 1950) ஈழத்துத் தமிழறிஞரும், எழுத்தாளரும், புலவரும் ஆவார்.[1]. பல வடமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

முகாந்திரம் தி. சதாசிவ ஐயர்
பிறப்புதி. சதாசிவ ஐயர்
1882
அளவெட்டி, யாழ்ப்பாணம்
இறப்புநவம்பர் 27, 1950
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுதமிழறிஞர், ஆசிரியர்
பெற்றோர்தியாகராஜ ஐயர்
செல்லம்மாள்

வாழ்க்கைக் குறிப்பு

சதாசிவ ஐயர் யாழ்ப்பாணம் தெற்கு அளவெட்டியில் பெருமாக்கடவை என்னும் ஊரில் 1882 ஆம் ஆண்டு தியாகராஜ ஐயர், செல்லம்மாள் ஆகியோருக்குப் பிறந்தார். இவர் கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றிப் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த கல்வி மாவட்டத்துக்கு வித்தியாதரிசியாக[2] (Director of Education) பணியில் இருந்தார்.

எழுத்துப் பணி

சமக்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். காளிதாசரின் இருது சங்காரம் என்னும் காப்பியத்தை இருது சங்கார காவியம் என்ற பெயரில் தமிழில் பாடல்கள் எழுதியுள்ளார். தேவி தோத்திர மஞ்சரி, தேவி மாநச பூசை அந்தாதி ஆகிய நூல்களையும் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வழங்கும் நாட்டார் பாடல்களைத் தொகுத்து வசந்தன் கவித்திரட்டு என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள் கொண்ட ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து அவற்றை அச்சேற்றி நூலாக வெளியிட்டார். இவை தவிர குழந்தைகளுக்காகப் பிள்ளைப் பாட்டு நூல் வெளிவரவும் ஐயர் உதவினார்.

இதழாசிரியர்

ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தினர் 1942 ஆம் ஆண்டில் வெளியிட்ட கலாநிதி என்ற பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்து பணியாற்றியுள்ளார்.[3] 1945 இல் சுவதர்மபோதம் என்ற மும்மாத இதழுக்கு ஆசிரியராக இருந்தார்.[4]

சமூகப் பணிகள்

யாழ்ப்பாணத்தில் பல தமிழ் பண்டிதர்களை உருவாக்கிய ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கத்தை நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர் சதாசிவ ஐயர். சங்கம் நடாத்திய பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் சோதனைகளில் தேறியவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரிய நியமனம் கிடைக்க வழி செய்தார்.[5]

தனது சொந்தச் செலவில் சுன்னாகம் கதிரமலை தேவஸ்தானம் எதிரில் பிராசீன பாடசாலை என்ற பெயரில் பாடசாலை ஒன்றை அமைத்தார். இப்பாடசாலையில் தமிழும் சம்க்ருதமும் தக்க அறிஞர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. புகழ் மிக்க தமிழறிஞர் வித்துவ சிரோமணி சி. கணேசையர் இப்பாடசாலைக்கு பொறுப்பாக இருந்துள்ளார்.[6]

பட்டம்

சதாசிவ ஐயர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளைக் கௌரவிக்குமுகமாக இலங்கை அரசு அவருக்கு முகாந்திரம் என்னும் கௌரவ பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.

எழுதிய நூல்கள் சில

  • இருது சங்கார காவியம்[7]
  • ஐங்குறு நூறு - மூலமும் உரையும்[8][9]
  • தேவி தோத்திர மஞ்சரி[8][10]
  • தேவி மாநச பூசை அந்தாதி

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. An introduction on vintage Lankan Thamil poets, ஈழ நாட்டு புலவர்களின் கவித்திறமும் தனிப்பாடல்களும் என்ற பன்மொழிப் புலவர் தா. கனகரத்தினம் எழுதிய நூலில் சதாசிவ ஐயரின் சில ஆக்கங்களும் அவற்றின் விளக்கங்களும் இடம் பெற்றுள்ளன, கே. எஸ். சிவகுமாரன், த டெய்லி நியூஸ், அக்டோபர் 8, 2008
  2. யாழ்ப்பாண வைபவ மாலையும் சரித்திராசிரியர்களும், வித்தியாதரிசி சதாசிவ ஐயர் "ஆராய்ச்சிக் கண்கொண்டு பார்க்கும்போது ஒவ்வாதன பல இதன் கண் இடம்பெறலாயின" என்று கூறியுள்ளார்.
  3. வெள்ளி விழா மலர். யாழ்ப்பாணம், இலங்கை: யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம். 1950. பக். xii.
  4. இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள், கோப்பாய் சிவம் (நூலகம் திட்டம்)
  5. "SL Army appropriates heritage institution in Jaffna for ‘cadet’ training". தமிழ்நெட். 18 மார்ச் 2011. http://map.tamilnet.com/art.html?catid=13&artid=33687. பார்த்த நாள்: 8 அக்டோபர் 2013.
  6. "சுன்னாகம் பிராசீன பாடசாலை". ஈழகேசரி. 1936-02-09. pp. 15. http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF_1936.02.09. பார்த்த நாள்: 30 சூன் 2018.
  7. இருது சங்கார காவியம் - மின்நூல், நூலகம் திட்டத்தில்
  8. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்
  9. ஐங்குறு நூறு மூலமும் உரையும், மின்நூல், நூலகம் திட்டத்தில்
  10. இருது சங்கார காவியம் - மின்நூல், நூலகம் திட்டத்தில்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.