தமிழறியும் பெருமான் கதை

தமிழறியும் பெருமான் கதை என்பது ஔவையாரோடு தொடர்புடைய கதைகளில் ஒன்று. தமிழறியும் பெருமான் என்பது ஒரு பெண்ணின் பெயர். [1]

அரசகுமரனும் அரசகுமரியும் காதலர்கள். வில்லன் ஒருவனால் இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் பேய் வடிவம் கொண்டு ஒரு சத்திரத்தில் தங்கி அங்கு வந்து தங்குவோரையெல்லாம் அச்சுறுத்தி முடுக்கிக்கொண்டிருந்தனர். ஒருநாள் ஔவையார் அந்தச் சத்திரத்தில் தங்கினார். பேய்கள் வழக்கம்போல் அச்சுறுத்தத் தொடங்கின. பெண்பேய் கல்வியில் வல்ல பேய். இந்தப் பேய் “எற்றெற்று” [2] என்று சொல்லிக்கொண்டு, காலால் எற்றி ஔவையாரை அறைய வந்தது. ஔவையார் அந்தப் பேயின் வரலாற்றை முன்பே அறிந்தவர். அந்தப் பேய் வரும்போது நான்கு பாடல்கள் பாடினார். அவற்றுள் ஒன்று

வெண்பா இருகாலில் கல்லாளை, வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதாளை – பெண்பாவி
பெற்றாளே பெற்றாள், பிறர்நகைக்கப் பெற்றாள்,என்(று)
எற்றோ,மற்(று) :எற்றோ,மற்(று) எற்று.

இப்படி நான்கு பாடல்கள்.

பேய் ஔவையை எற்ற வர, ஔவை பேயை எற்றப் போவதாகப் பாடினார்.

பேய் நடுங்கி ஔவையின் காலில் விழுந்து வணங்கியது. ஔவை அந்தப் பேயின் எதிர்கால வாழ்க்கையை எடுத்துரைத்தார். அவர் வாக்குப்படி பெண்பேய் தமிழறியும் பெருமான் எனப் போற்றப்படும் பெருமாட்டியாகப் பிறந்தது. அவளது முற்பிறவிக் காதலன் விறகுவெட்டியின் மகனாகப் பிறந்து விறகு வெட்டிக்கொண்டிருந்தவனைக் கண்டு காதல் கொண்டு திருமணம் நடந்தேறியது.

  • இங்குக் காட்டப்பட்டுள்ள பாடல் 16-17ஆம் நூற்றாண்டினது ஆகலாம்.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. இது மரபுக்கு ஒவ்வாத வழக்கு
  2. (எத்து, எத்து)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.