டேவிட் ராஜேந்திரன்

டேவிட் ராஜேந்திரன் (27 டிசம்பர் 1945 — 19 டிசம்பர் 2013) ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும், ஊடகவியலாளரும் ஆவார். இலங்கை வானொலியில் பணி புரிந்தவர்.

வாழ்க்கைச் சுருக்கம்

டேவிட் ராஜேந்திரன் யாழ்ப்பாணம், பாசையூரில் அண்ணாவியார் தீயோ ராஜேந்திரன், அஞ்சலீனா ஆகியோருக்கு 1945 டிசம்பர் 27 இல் பிறந்தவர். தந்தை தியோ ராஜேந்திரன் தென்பாங்கு நாட்டுக்கூத்துக் கலைஞர். டேவிட் ராஜேந்திரன் 1960களில் இலங்கை வானொலியில் தொழில்நுட்பப் பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் கிராமியப் பாடல்கள் என்ற நிகழ்ச்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக நீண்ட காலம் பணிபுரிந்தார். வானொலி நாடகங்களிலும் இவர் நடித்துப் பெயர் பெற்றார்.[1]

தந்தையின் வழியில் பல நாட்டுக்கூத்துகளில் நடித்ததுடன், நாடக நடிகராகவும் பல நாடகங்களில் நடித்தவர். சிலப்பதிகாரத்தைத் தழுவிய முத்தா மாணிக்கமா, மற்றும் சத்தியவான் சாவித்திரி ஆகிய நாட்டுக் கூத்து நாடகங்கள் இலங்கையில் பல முறை மேடையேறி வெற்றி பெற்றன.[1]

புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த டேவிட் ராஜேந்திரன் ரிரிஎன் தமிழ்த் தொலைக்காட்சியில் பணியாற்றினார். 'புதினக் கண்ணாடி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அதன் செய்திப் பிரிவிலும் பணியாற்றியுள்ளார்.[1]

இவருக்கு சந்திரா என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.