ஞானக்கூத்தன்
ஞானக்கூத்தன் (Gnanakoothan) (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு இந்திய தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார். "அன்று வேறு கிழமை", "சூரியனுக்குப் பின்பக்கம்", "கடற்கறையில் சில மரங்கள்", "மீண்டும் அவர்கள்" மற்றும் "பென்சில் படங்கள்" போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் நவீன தமிழ் இலக்கியத்தின் கவிஞராக போற்றப்படுகிறார். இவரின் கவிதைகள், "கல்கி", "காலச்சுவடு" மற்றும் "உயிர்மெய்" போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
ஞானக்கூத்தன் | |
---|---|
புனைப்பெயர் | ஞானக்கூத்தன் |
தொழில் | கவிஞர் |
நாடு | இந்தியன் |
எழுதிய காலம் | 1957–2016 |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
அன்று வேறு கிழமை சூரியனுக்கு பின்பக்கம் கடற்கரையில் சில மரங்கள் மீண்டும் அவர்கள் பென்சில் படங்கள் |
www.gnanakoothan.com |
இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, ந. கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற'. 'கவனம்' என்ற சிற்றிதழைத் தொடங்கினார். 'ழ' இதழின் ஆசிரியர்களில் ஆத்மநாம், மற்றும் ராஜகோபாலனுடன் இவரும் ஒரு ஆசிரியராக இருந்தார். இவர் 'மையம்', 'விருட்சம்' (தற்போது நவீன விருட்சம்), மற்றும் 'கணையாழி' பத்திரிகைகளில் பங்களித்திருக்கிறார். க. நா. சுப்பிரமணியத்தின் 'இலக்கிய வட்டம்', சி. மணியின் 'நடை' போன்ற சிற்றிதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளது. இவரது கவிதைகள் பெரும்பாலும் சமூகத்தை சித்தரிப்பதாக உள்ளது.[1][2][3]
தொழில்
இவர் 1968இல் இருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவர் 'பிரச்சினை' என்கிற கவிதையின் மூலம் அறிமுகமானார். 1998இல் இவரது கவிதைகள் "ஞானக்கூத்தன் கவிதைகள்" என்கிற பெயரில் வெளியிடப்பட்டது.[4]
திரைப்பட பங்களிப்பு
மருதநாயகம் (திரைப்படம்) திரைக்கதையை, புவியரசு, சுஜாதா(எழுத்தாளர்) ஆகியோருடன் இணைந்து எழுதியுள்ளார்.
இயற்றிய நூல்கள்
- கவிதை நூல்கள்:
- அன்று வேறு கிழமை
- சூரியனுக்குப் பின்பக்கம்
- கடற்கரையில் சில மரங்கள்
- மீண்டும் அவர்கள்
- பென்சில் படங்கள்
- ஞானக்கூத்தன் கவிதைகள்
- என் உளம் நிற்றி நீ
- இம்பர் உலகம்
கட்டுரை நூல்கள்
- கவிதைக்காக
- கவிதைகளுடன் ஒரு சம்வாதம்
பிற படைப்புகள்
- கனவு பல காட்டல்
- நம்மை அது தப்பாதோ?
- சொன்னதை கேட்ட ஜன்னல் கதவு
- அலைகள் இழுத்த பூமாலை
விருதுகள்
2010இல் கவிதைக்காக சாரல் விருதினைப் பெற்றார்.[5] விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வழங்கும், இலக்கிய பங்களிப்பிற்கான விஷ்ணுபுரம் விருதினை (2014)இல் பெற்றார்.[6]
மறைவு
கவிஞர் ஞானக்கூத்தன் 2016 சூலை 27 புதன்கிழமை தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்.[7]
மேற்கோள்கள்
- "Five decades of Tamil Poetry by Rajaram Brammarajan". museindia.com. பார்த்த நாள் 5 July 2013.
- "Indian Poets Writing in Tamil". oocities.org. பார்த்த நாள் 5 July 2013.
- "A slice of the sixties brought to life by T. Ramakrishnan". thehindu.com. பார்த்த நாள் 5 July 2013.
- LIS India Tamil Literature Official website.
- SARAL award list Retrieved 5 July 2013.
- "Vishnupuram Award 2014 event video". Vishnupuram Ilakkiya Vattam. பார்த்த நாள் 9 June 2016.
- "தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் காலமானார்". தி இந்து. பார்த்த நாள் 28 July 2016.