ஜாக்ரதா முஸ்லிம் ஜனதா வங்காளதேசம்
ஜாக்ரதா முஸ்லிம் ஜனதா வங்காளதேசம் (Jāgrātā Muslim Jānātā Bānglādesh, ஜே.எம்.ஜே.பி, JMJB) என்பது வங்காளதேசத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்பாகும். வங்காளதேச அரசு இந்த அமைப்பை தீவிரவாதக் குழு என அறிவித்துள்ளது. ஜாக்ரதா எனில் வங்க மொழியில் விழிப்புணர்வு எனப் பொருள்.
இந்த அமைப்பு வங்காளதேசத்தின் வடமேற்குப் பகுதியில் செயல்படுகிறது. இக்குழுவிற்கு அல் காயிதா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.[1] ஆனால் அதற்குரிய ஆதாரங்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியின்படி வங்காளதேசத்தில் வளர்ந்து வரும் அடிப்படைவாத இஸ்லாமியக் குழுக்களுள் இதுவும் ஒன்று எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்காளதேசத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு இக்குழு காரணம் ஆகும்.[1]
இக்குழுவானது பங்களா பாய் மற்றும் ஷேக் அப்துர் ரஹ்மான் ஆகியோர் தலமையில் இயங்குகிறது. சித்திக்யூர் ரஹ்மான் பங்களா பாய் என அழைக்கப்படுகிறார். தீவிரவாதச் செயல்களுக்காக இவ்விருவரையும் வங்காளதேச அரசு தேடி வந்தது. இவ்வமைப்பின் கீழ்மட்டத் தலைவர்கள் சிலரை அரசு கைது செய்துள்ளது. இக்குழுவானது 1990 களின் கடைசியில் தொடங்கப்பட்டது. வங்காளதேசத்தின் வடமேற்குப் பகுதியில் நடைபெற்ற கொலைகளுக்குப்[2] பின் இக்குழுவைப் பற்றி தெரிய ஆரம்பித்தது. அதன் பின்னர் 2004 ஆம் ஆண்டு வங்காளதேச அரசால் இக்குழு தடை செய்யப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் வழங்கி தகவலின் படி இவர்கள் அமெரிக்காவிற்கு எதிராகப் போர்புரிய ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானில் பயிற்சி எடுத்தவர்கள் என தெரியவந்தது. பங்களா பாய் பற்றி தகவல் தருபவர்களுக்கு சன்மானம் என வங்காளதேச அரசு அறிவித்தது. அதன் பின் நடந்த தொடர் கண்காணிப்பில் பங்களா பாய் மைமென்சிங் மாவட்டத்தில் அவரது மனைவி மற்றும் 5 ஆதரவாளர்களுடன் இருக்கும் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.[3][4]