சொரிமணல்
சொரிமணல் அல்லது புதைமணல் என்பது, மணல், வண்டல் போன்ற மணியுருவான பொருட்களையும், களிமண், உப்புநீர் ஆகியவற்றையும் கொண்டிருக்கும் கூழ் நிலையில் உள்ள நீரேறிய களிப்பொருள் ஆகும். நிலத்தின் கீழ் உருவாகும் நீரோட்டம், பொருத்தமான அளவில் மணல் மற்றும் பிற பொருட்களின் கலவையைக் கொண்ட இடங்களில் குவியக்கூடும். இவ்விடங்களில் நீர் குறித்த மணல் பகுதி வழியே மேலேறி மீண்டும் மெதுவாகக் கீழ் நோக்கி வரும். இம்மணற் பகுதி பார்வைக்குத் திடப்பொருளாகக் காட்சியளிக்கும். ஆனால், நீர் மணல் துணிக்கைகளிடையே உராய்வு நீக்கியாகச் செயல்படுவதால், இம் மணல் பகுதி குறிப்பிடத்தக்க சுமையைத் தாங்க முடியாததாக இருக்கும். இவ்விடங்களில் பொதுவாக நீர் மேற்பரப்புக்குச் செல்வதில்லை ஆதலாலும், மேற்பரப்பில் இலை போன்ற சிறிய, நிறை குறைவான பொருட்கள் தாங்கப்படும் ஆதலாலும், சூழ்வுள்ள நிலப் பகுதிக்கும் இதற்கும் வேறுபாடு காண்பது கடினம். இதனால் இதன்மீது யாராவது நடக்க முயலும்போது மணலுள் புதைய நேரிடுகின்றது.
