சின் சி ஹுவாங்
யிங் ஷெங் என்னும் சொந்தப் பெயர் கொண்ட சின் ஷி ஹுவாங் (கிமு 259 – செப்டெம்பர் 10, கிமு 210), கிமு 247 முதல் கிமு 221 வரை சீனாவிலிருந்த நாடுகளில் ஒன்றான சின் (Qin) என்பதன் அரசராக இருந்தார். இவர் கிமு 221 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசர் ஆனார். கிமு 210 இல் இறக்கும் வரை அவர் ஆட்சி புரிந்தார். இவர் சீனாவை ஒன்றாக இணைத்ததற்காகவும், "சட்டத்தின் ஆட்சி" என்னும் கொள்கையை அறிமுகம் செய்ததற்காகவும் பெயர் பெற்றார்.
![]() Qin Shi Huang | |
சின் ஷி ஹுவாங் | |
Ancestral name (姓): | யிங் (嬴) |
Clan name (氏): | சாவோ (趙),அல்லது சின் |
Given name (名): | செங் (政) |
சின் நாட்டு அரசர் | |
Dates of reign: | ஜூலை கிமு 247 –கிமு 221 |
Official title: | சின் நாட்டு அரசர் (秦王) |
சின் வம்சப் பேரரசர் | |
Dates of reign: | கிமு 221 –செப்டெம்பர் 10, கிமு 210 |
Official title: | முதல் பேரரசர் (始皇帝) |
Temple name: | இல்லை. |
Posthumous name: | இல்லை. |
Dates are in the proleptic Julian calendar |
சின் ஷி ஹுவாங், சீன வரலாற்றில் ஒரு சர்ச்சைக்கு உரியவராகவே இருந்து வருகிறார். சீனாவை ஒன்றிணைத்தபின் இவரும் இவரது தலைமை ஆலோசகர் லி சியும், இணைப்பைப் பாதுகாக்குமுகமாக தொடர்ச்சியான பல சீர்திருத்தங்களைச் செயற்படுத்தியதுடன், சீனப் பெருஞ்சுவரின் முதல் அமைப்பு உட்பட மிகப் பெரிய திட்டங்களையும் நடைமுறைப்படுத்தினர். ஆளுயர களிமண் படைவீரரால் காக்கப்படும் நகர அளவிலான உயர் வேலைப்பாடு கொண்ட, புகழ் பெற்ற சமாதி; தேசிய அளவிலான பெருஞ் சாலை அமைப்புக்கள் என்பனவும் இத் திட்டங்களுள் அடங்கியிருந்தன. இவ்வமைப்பு வேலைகளின்போது பலர் உயிரிழந்தனர். பேரரசில் உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இவர் கன்பூசியனியத்தைத் தடை செய்ததுடன், அதன் அறிஞர்கள் பலரையும் உயிருடன் புதைத்ததாகவும் கூறப்படுகிறது. அரசால் அனுமதிக்கப்பட்டவை தவிர்ந்த ஏனைய நூல்கள் யாவும் எரிக்கப்பட்டன.
இவருடைய ஆட்சியில் இத்தகைய கொடுங்கோன்மையும், எதேச்சாதிகாரமும் நிலவியபோதும், சின் ஷி ஹுவாங் சீன வரலாற்றில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவர் சீனாவை ஒன்றிணைத்தது 2000 ஆண்டுகளாக நிலைத்திருந்தது.