சாத்து

சாத்து என்பது சார்ந்து செல்லும் வணிகர் கூட்டம்.

  • பண்டங்களைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு அவர்கள் செல்வது வழக்கம். பல வழிகள் ஒன்றுகூடும் இடங்களில் இருந்துகொண்டு அரசனின் காவலர் ‘உல்கு’ என்னும் சுங்கவரி வாங்குவதோடு மட்டுமல்லாமல் சாத்து வணிகர்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள். [1]
  • சாத்துக் கூட்டம் ஊரில் வந்து தங்கிய காலத்தில் பகைவர் தாக்க வந்தால் தண்ணுமை முழக்கி அவர்களைச் செல்லவேண்டாம் எனத் தடுப்பர்.[2]
  • காட்டுத்தீ எரித்த இடங்களில் சாத்துக் கூட்டம் வழி தடுமாறும். அங்குப் புலியும் யானையும் தாக்கிக்கொள்ளும். [3]
  • உப்பு வணிகச் சாத்து சமைத்து உண்ட அடுப்புத் தீயில் மழவர் கூட்டம் தமது கறித்துண்டுகளை சுட்டுத் தின்பர்.[4]
  • சாத்துக் கூட்டத்துக்கு வழிப்பறி அச்சமும் உண்டு.[5]
  • மதுரைக்குச் செல்லும் வழியில் கோவலனை வழிமறித்த ‘வனசாரியை’ என்னும் பெண் தெய்வம் தான் சாத்துக் கூட்டத்துடன் வந்து வழியில் தனிமைப்பட்டதாகக் கூறுகிறது. [6]

அடிக்குறிப்பு

  1. அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு, வழங்கும்
    உல்குடைப் பெரு வழிக் கவலை காக்கும்
    வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின் (பெரும்பாணாற்றுப்படை 80 முதல்)
  2. வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,
    வளை அணி நெடு வேல் ஏந்தி,
    மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே (குறுந்தொகை 390)
  3. அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
    மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
    இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங் காட்டு, (அகம் 39)
  4. உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
    நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் (அகம் 119)
  5. சாத்து எறிந்து
    அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்
    கொடு வில் ஆடவர் படு பகை (அகம் 291)
  6. சாத்தொடு போந்து தனித் துயர் உழந்தேன்; (சிலப்பதிகாரம் 11-190)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.