கோ. கேசவன்
கோ. கேசவன் (1946, அக்டோபர், 5 - 1998 செப்டம்பர் 16 ) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மார்க்சியர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.
துவக்கக்கால வாழ்கையும் கல்வியும்
கேசவன் மதுரையில் 05.10.1946 ஆம் நாள் கோவிந்தன்- பொன்னம்மாள் இணையருக்கு பிறந்தார். துவக்கக் கல்வியை பரிதிமாற் கலைஞர் ஆரம்பப் பள்ளியிலும், உயர்நிலை பள்ளிக் கல்வியை மதுரை மன்னர் சேதுபதி உயர் நிலைப் பள்ளியிலும் பயின்றார். புகுமுக வகுப்பை மதுரைக் கல்லூரியிலும், பட்டப்படிப்பு, முதுகலைப் படிப்பு முதலியவற்றை மதுரை தியாகராசர் கல்லூரியிலும் முடித்தார். சி. சுப்பிரமணிய பாரதியார் படைப்புகளில் அரசியல் பின்னணி என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
துவக்க காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யிலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் இணைந்து பணியாற்றினார். பின்னர் சமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் ஆகிய இதழ்களில் ஆசிரியர் குழுவில் பங்கேற்றுப் பணி புரிந்தார்.
வாழ்க்கை
படிப்பை முடித்தப்பின் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுத் துறையில் மொழி பெயர்ப்பாளராக சில ஆண்டுகள் பணி புரிந்தார். பின்னர் திருச்சி, புதுக்கோட்டை முதலிய அரசுக் கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். சோசலிசக் கருத்துக்களும் பாரதியாரும்,[1] சமூக விடுதலையும் தாழ்த்தப்பட்டோரும் முதலிய முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மேலும் பாரதியார் குறித்த ஆவணத் தொகுப்பை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். மேலும், ஜார்ஜ் தாம்சனின் நூலை, ‘மனித சமூக சாரம்’ என்ற தலைப்பிலும், மாரிஸ்கார்ன் போர்த்தின்- லெனினியத்தின் அடிப்படை அம்சங்கள், இயக்கவியல் பொருள்முதல்வாதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்.
சமரன், செந்தாரகை, தோழமை, மக்கள் தளம் முதலிய இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து முக்கிய பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். மக்கள் பண்பாடு, மன ஓசை, புலமை, பாலம், கவி, கனவு, மறை அருவி, தோழமை, நிறப்பிரிகை, புதியன, இலக்கு, சிந்தனையாளன், பனிமலர் (லண்டன்) ஆகிய இதழ்களில் கட்டுரைகளை எழுதினார். கேசவன் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத் திட்டக்குழு உறுப்பினராகவும், தமிழக அரசின் சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் நடுவராகவும் செயல்பட்டார்.[2]
கேசவன் ஆய்வுமுறை
அறிஞர் கோ. கேசவனின் ஆய்வுமுறை என்பது மார்க்சிய இயங்கியல் பொருள்முதல்வாத வழிப்பட்டது.
"சமூக உற்பத்தி முறைதான் எல்லாவகையான சமூக உணர்வுகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியவை ஆகும். இந்தப் பொருளாதார அமைப்பே அடித்தளம் எனப்படுகிறது."
"தத்துவ இயல், மதம், அறிவியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை, போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்பத் தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.”
"அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்பிற்கும் இடையே ஒன்றோடொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பைத் தோற்றுவிக்கும் காரணமாகவும் அமைகிறது. ஆகவே சமூக அடித்தளத்திற்கு ஒத்த மேல் கட்டமைப்பு உருவாகிறது. உருவாகும் என்பதை மேற்கட்டுமானம் தானாகவே ஏற்பட்டுவிடும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அடித்தளம், மேற்கட்டமைப்பைத் தீர்மானிக்கிறது, நிர்ணயிக்கிறது என்றுதான் மார்க்சியம் கூறுகிறது." இதுவே மார்க்சிய வழிப்பட்ட கோ.கேசவனின் ஆய்வுமுறை.
மறைவு
1998-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 16 அன்று தமது ஐம்பத்து இரண்டாவது வயதில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார்.
எழுதிய நூல்கள்
1. டிசம்பர் 1979: மண்ணும் மனித உறவுகளும், சென்னை புக் ஹவுஸ், சென்னை.
2. அக்டோபர் 1981: பள்ளு இலக்கியம் ஒரு சமூகவியல் பார்வை. அன்னம் (பி) லிட், சிவகங்கை (முதல் பதிப்பு).
3. டிசம்பர் 1982: இயக்கமும் இலக்கியப் போக்குகளும், சென்னை புக் ஹவுஸ், சென்னை.
4. மே 1984: இலக்கிய விமர்சனம் - ஒரு மார்க்சியப் பார்வை, அன்னம் (பி) லிட், சிவகங்கை.
5. ஜூலை 1985: கதைப்பாடல்களும் சமூகமும், தோழமை வெளியீடு, கும்பகோணம்.
6. டிசம்பர் 1985: இந்திய தேசியத்தின் தோற்றம், சிந்தனை யகம், சென்னை - 17.
7. ஜூலை 1986: நாட்டுப்புறவியல் - ஒரு விளக்கம், புதுமைப் பதிப்பகம், திருச்சி.
8. ஆகஸ்டு 1986: மார்க்சியத் திறனாய்வுச் சிக்கல்கள், புதுமைப் பதிப்பகம், மதுரை.
9. செப்டம்பர் 1986: புதியக் கல்விக் கொள்கை , பு.ப. இயக்கம்.
10. மார்ச் 1987: புராணச் சார்புக் கதைப்பாடல்களில் ஆண் பெண் உறவு நிலை, புதுமைப் பதிப்பகம், திருச்சி.
11. 1987: நாட்டுப்புறவியல் கட்டுரைகள், புதுமை பதிப்பகம், திருச்சி.
12. நவம்பர் 1987: சோசலிச கருத்துகளும் பாரதியாரும், ரசனா புக் ஹவுஸ், சென்னை .
13. டிசம்பர் 1988: பொதுவுடைமை இயக்கமும் சிங்காரவேலரும். (1921-1934), சரவண பாலு பதிப்பகம், விழுப்புரம்.
14. டிசம்பர் 1988: தமிழ்ச் சிறுகதைகளில் உருவம், அன்னம் (பி) லிட், சிவகங்கை .
15. ஜூலை 1990: சோசலிசமும் முதலாளிய மீட்சியும், புதுமைப் பதிப்பகம், திருச்சி.
16. அக்டோபர் 1990: ரசியப் புரட்சி ஒரு மாயையா? புதுமை பதிப்பகம், திருச்சி.
17. அக்டோபர் 1990: சுயமரியாதை இயக்கமும் பொதுவுடைமையும், சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
18. நவம்பர் 1990: இட ஒதுக்கீடு, சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
19. மே 1991: திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும், செல்மா பதிப்பகம், சிவகங்கை.
20. டிசம்பர் 1991: பாரதியும் அரசியலும், அலைகள் வெளியீட்டகம், சென்னை -24.
21. ஜூன் 1994: சமூகவிடுதலையும் தாழ்த்தப்பட்டோரும், சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
22. ஜூன் 1995: தாழ்த்தப்பட்டோர் இலக்கியம், பஃறுளி பதிப்பகம், சென்னை -5.
23. அக்டோபர் 1995: அம்பேத்கரிசம் - ஆளும் வர்க்கச் சித்தாந்தமா? சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
24. டிசம்பர் 1995: திராவிட இயக்கத்தில் பிளவுகள், அலைகள் வெளியீட்டகம், சென்னை -24.
25. டிசம்ப ர் 1995: சாதியம், சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
26. டிசம்ப ர் 1997: கோவில் நுழைவுப் போராட்டங்கள், சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
27. பிப்ரவரி 1998: தலித் இலக்கியம் சில கட்டுரைகள், புதுமைப் பதிப்பகம், திருச்சி.
28. ஏப்ரல் 1998: பாரதி முதல் கைலாசபதி வரை, அகரம், கும்பகோணம்.
29. ஜூலை 1998: தமிழ், மொழி, இனம், நாடு, அலைகள் வெளியீட்டகம், சென்னை -24.
30. டிசம்பர் 1998: தலித் அரசியல், சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
31. டிசம்பர் 1998: அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும், சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
32. டிசம்பர் 1999: முனைவர் கோ. கேசவன் கட்டுரைகள், சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்.
33. டிசம்பர் 2001: நமது இலக்குகள் சரவணபாலு பதிப்பகம். விழுப்புரம்.
மேற்கோள்கள்
- "மகாகவி பாரதியைப் பற்றி அறிய". mahakavibharathiyar.info/b_noolgal. பார்த்த நாள் 22 சூலை 2016.
- பி.தயாளன் (2016 சூன்). "‘புரட்சிகர எழுத்துப் போராளி’பேராசிரியர் கோ.கேசவன்". கீற்று. பார்த்த நாள் 22 சூலை 2016.