கானப்பேரெயில்

சங்ககாலத்தில் கானப்பேரெயில் என வழங்கப்பட்ட ஊர் இக்காலத்தில் காளையார் கோயில் எனப் பெயர் பூண்டுள்ளது. வேங்கைமார்பன் என்பவன் இவ்வூரில் இருந்துகொண்டு ஆண்ட சங்ககால மன்னன். உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டியன் வேங்கைமார்பனை வென்று இந்த ஊரைத் தனதாக்கிக்கொண்டான். [1] இதனால் இந்தப் பாண்டியனைக் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி எனச் சிறப்பித்துள்ளனர்.

கானப் பேரெயில் அமைப்பு

கானப் பேரெயில் என்னும் கோட்டை ஆழமான அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் மீன் பூத்தது போலப் பதுங்கி இருந்து பகைவரைத் தாக்கும் ஞாயில்களையும், சுற்றிலும் வெயில் நுழைய முடியாத இருண்ட கால்காடுகளையும், வீரம் மிக்க குடிமக்கள் வாழும் சிற்றூர்களையும் கொண்டது. [2]

திருகானப்பேர் உடையான் என்னும் குறுநில மன்னன் இவ்வூரைத் தலைநகராகக் கொண்டு திரிபுவனச் சக்கரவர்த்தி மாறவர்மன் சுந்தர பாண்டியனது ஆளுகைக்கு உட்பட்டு 13-ஆம் நூற்றாண்டில் ஆண்டுவந்தான்.

சான்று மேற்கோள்

  1. ஐயூர் மூலங்கிழார் – புறநானூறு 21
  2. 'நில வரை இறந்த குண்டு கண் அகழி,
    வான் தோய்வு அன்ன புரிசை, விசும்பின்
    மீன் பூத்தன்ன உருவ ஞாயில்,
    கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை,
    அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில், (புறநானூறு 21)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.