கறுப்புச் சாவு
கறுப்புச் சாவு (Black Death) என்பது 1348 தொடக்கம் 1350 வரை ஐரோப்பாவில் பரவிய ஒரு தொற்று நோய். இது மனித வரலாற்றிலே மிகவும் கெடுதியாக அமைந்த தொற்று நோய்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது பாக்டீரியாத் தொற்றினால் ஏற்பட்ட பிளேக் என்றே பரவலாக நம்பப்படுகிறது. இது சீனாவில் தோன்றி பட்டுப்பாதை வழியாக கிரிமியாவை சுமார் 1346 இல் அடைந்து, பின்னர் அங்கிருந்து இலண்டன் மற்றும் நண்ணிலப் பகுதிகளுக்கு பயணிக்கும் கப்பல்களில் மறைந்திருந்த கறுப்பு எலிகள் தொற்றுநோய் காவிகளாக செயற்பட்டமையால் ஐரோப்பாவில் உருப்பெறத் தொடங்கிற்று.

கறுப்புச் சாவு ஐரோப்பிய மக்கள்தொகையில் 30 விழுக்காட்டிற்கும் 60 விழுக்காட்டிற்கும் இடைப்பட்ட மக்களைக் கொன்றுள்ளது. ஐரோப்பிய வரலாற்றை சமூக, சமய, பொருளியல் தளங்களை மற்றியமைத்ததில் இக்கறுப்புச் சாவுக்கு பெரும் பங்கு உண்டு. இச்சாவிலிருந்து தேற 150 ஆண்டுகளுக்கு மேல் எடுத்தது. மீளவும் இது அவ்வப்போது தலையெடுத்த போதும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் முற்றாக அழிக்கப்பட்டது.