ஒக்கூர் மாசாத்தனார்

ஒக்கூர் மாசாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்களாகச் சங்கநூல்களில் இரண்டு மட்டும் உள்ளன. அவை: அகநானூறு 14, புறநானூறு 248 ஆகியவை.

பாடல் தரும் செய்தி

பிரிந்திருக்கும் தலைவனிடம் பாணன் தலைவியின் துயர நிலையை வெளிப்படுத்துகிறான். காயாம் பூக்கள் நீல நிறத்தில் உதிர்ந்து கிடக்கும் முல்லை நிலத்தில் சிவப்பு நிற மூதாய்ப் பூச்சிகள் மேய்கின்றன. மேய்ந்துகொண்டிருக்கும் ஆண்மான் பெண்மானைத் தழுவிக்கொண்டு விளையாடுகிறது. ஆனிரைகள் இல்லம் திரும்பும் மாலை வேளை இது. இந்த வேளையில் பிரிந்திருக்கும் என் காதலர் என்னைப்பற்றி நினைப்பாரா என்று தலைவி தன்னிடம் வினவியதாகப் பாணன் தலைவனிடம் தெரிவிக்கிறான். பாணன் கூறியது கேட்ட தலைவன் தலைவியிடம் வந்து சேர்கிறான்.[1]

தாபத நிலையை விளக்குகையில் கணவனை இழந்து கைம்மை நோன்பிருக்கும் ஒருத்தி ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு உண்பதாகவும், அதுவும் அல்லி இலையில் உணவை வைத்து உண்பதாகவும் இவர் குறிப்பிடுகிறார். இந்தக் கைமைக் கோலத்துப் பெண் இவளது இளமைக் காலத்தில் இவள் அணியும் தழையாடையில் கோக்கப்பட்டு அழகுடன் திகழ்ந்த இந்த இந்த அல்லி இலை இப்போது உணவு உண்டபின் தூக்கி எறியும் எச்சில் இலையாக மாறிவிட்டதே என்று புலவர் கலங்குகிறார்.[2]

மேற்கோள்

  1. அகநானூறு 14
  2. புறநானூறு 248
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.