ஊண்பித்தை

ஊண்பித்தை என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 232 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவரது பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளது. பாலைத் திணைப் பாடல் அது.

புலவர் பெயர் விளக்கம்

ஊண் என்றால் உணவு. பாலைநிலத்தில் இரலைமான் ஒன்று ஊணுக்காக அலைகிறது. அப்போது அதற்குக் கிடைத்ததெல்லாம் மரல் என்னும் கானல்நீர்தான். இது ஊண்பித்து. இப்படிப் புதுமையான ஊண்பித்தைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளதை எண்ணி, இவரது இயற்பெயர் தெரியாத நிலையில் குறுந்தொகை நூலைத் தொகுத்தவர் இவருக்கு ஊண்பித்தை என்று பெயர் சூட்டியுள்ளார்.

பாடல் தரும் செய்தி

'மரல் புகா அருந்திய மா எருத்து இரலை' (அனலாக ஓடும் காற்றாகிய கானல்நீரை மட்டுமே உணவாகக் கொண்ட மான்) யானை ஒடித்து உண்டு போட்டுவிட்டுச் சென்ற மரத்தடி நிழலில் உறங்குமாம்.

இப்படிப்பட்ட வழியில் செல்வோர் நம்மை நினைப்பாரோ, நினைக்க மாட்டாரோ? அவரோடு பேசமுடியவில்லையே - தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியிடம் தோழி இவ்வாறு சொல்வது ஒருவகை ஆறுதல் மொழி.

அரிய சொல்

'புகா' என்னும் சொல் குழந்தைகளுக்கு ஊட்டும் கூழாஞ்சோற்றைச் குறிக்கும். 'புவா தின்னும்மா' என்று சொல்லிக்கொண்டு தமிழ்த் தாய்மார் இன்றும் தம் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவர்.

அரிய தொடர்

வாய்ப்புணர்வு
ஒருவர் பேசுகிறார். அதனைக் கேட்டவர் சொன்னவரிடம் பேசுகிறார். இருவர் வாய்களும்(வாயில் வரும் சொற்களும்) புணர்கின்றன. இப்படி 'உரையாடலை' இந்தப் பாடல் 'வாய்ப்புணர்வு' என்று குறிப்பிடுகிறது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.