இராமநாதபுரம், கிளிநொச்சி

இராமநாதபுரம் இலங்கையின் வட மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரைச்சி பிரதேசத்தில் அமைந்திருக்கிறது. இது ஒரு வேளாண்மைக் கிராமம் ஆகும்.

ஒரு கிராமிய பண்புகளோடு அமைவு பெற்றிருக்கும் இப்பிரதேசம் இயற்கை வளங்களின் வனப்பையும் வளப்படுத்தி இருக்கிறது. ஆலடி, புதுக்காடு போன்ற குக்கிராமங்களையும் நிர்வாக ரீதியாக தன்னோடு இணைத்து வைத்துள்ள இக்கிராமத்தின் எல்லைகளாக வடக்கே பெரியகுளம் கிராமமும், கிழக்கு திசையில் கல்மடு நகரும், தெற்கு திசையில் அம்பகாமம் காடும் மேற்குத்திசையில் வட்டக்கச்சி பிரதேசமும் அமைந்திருக்கின்றன.

"இராமநாதபுரம்" என்ற பெயர்க்காரணம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் (கிட்டத்தட்ட 1948 ஆம் ஆண்டுக்கு முன்னர்) இப்பிரதேசத்தின் குடியேற்றத் திட்டத்திற்கு, அன்று அரசியல் ரீதியான செல்வாக்குப் பெற்றிருந்த சேர். பொன் இராமநாதன் அவர்கள் முன்னின்று பாடுபட்டிருக்கிறார். அதனாலேயே இராமநாதபுரம் என்ற பெயர் உருவானதாக இங்குள்ள முதியவர்கள் மூலம் அறியக்கிடைக்கிறது.

கல்வி

இப்பிரதேச வாசிகள் அனைவருமே கல்விகற்பதில் ஆர்வமும், அறிவுத்தேடலும் உடையவர்களாவர். இவர்களின் அறிவுத்தேடலுக்குத் தீனி போடும் வகையில் மூன்று அரச பாடசாலைகள் இப்பிரதேச எல்லைக்குள் அமைந்திருக்கின்றன.

  • கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம்
  • கிளி/இராமநாதபுரம் கிழக்கு அ.த.க. பாடசாலை
  • கிளி/அழகாபுரி மகா வித்தியாலயம், புதுக்காடு.

பண்பாடு

இங்கு இந்து, கிறித்தவம் ஆகிய சமயங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இசுலாமியர்களும் வசித்துள்ளனர். 1990அக்டோபரில் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் சில அசாதாரண அரசியல் காரணங்களால் இலங்கையின் பிற பகுதிகளுக்கு குறிப்பாக தென்னிலங்கைக்கு இடம்பெர்ந்தனர்.

ஆலயங்கள்

இப்பிரதேச மக்களின் ஆன்மீகப்பற்றுணர்வின் வெளிப்பாடாக பின்வரும் ஆலயங்கள் அமைந்திருக்கின்றன.

  • அருள்மிகு வயலூர் முருகன் ஆலயம்.
  • புனித சூசையப்பர் தேவாலயம்.
  • அருள்மிகு புதுக்காடு ஐயனார் ஆலயம்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.