இந்தியாவில் நடனம்
இந்தியாவில் நடனம் பல வருட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்திய கலாச்சாரத்தில் பல்வேறு வகையான நடனங்கள் பல இடங்களில் பாரம்பரியமாகத் தோன்றி இன்று நீங்கா இடம் பெற்றுள்ளன.
நடனக்கலை
பரதநாட்டியம்
முதன்மை கட்டுரை: பரதநாட்டியம்
பரதநாட்டியம் தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற நடனமாகும். பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் ஆகியவையாகும். உருப்படிகள் அலாரிப்பு, ஜதிசுரம், சப்தம், வர்ணம், பதம், தில்லானா, விருத்தம், மங்களம் என்பவையாகும்.
கதகளி
முதன்மை கட்டுரை: கதகளி
கதக்களி கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள். ஆட்டக்கதை என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதி பாட்டு, காளியாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்க்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாகப் பழங்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன.
குச்சிப்புடி
முதன்மை கட்டுரை: குச்சிப்புடி
குச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிப்புடி என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது.
ஒடிசி
முதன்மை கட்டுரை: ஒடிசி
ஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப்படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.